கோப்புப் படம் 
வேலை வாய்ப்பு

உதவி பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சி.பிரதாப்

சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு இரு முறை ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு சில அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப் படும். அதன்படி நடப்பாண்டுக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஜூன் 25 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த மே.1-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் /csirnet.nta.ac.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய பட்டதாரிகளுக்கு மே 29 முதல் 31-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும். இந்த தேர்வானது ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே நடைபெறும்.

தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் மாணவர்கள் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது csirnet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்புக் கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மற்றொரு யுஜிசி நெட் தேர்வெழுத விண்ணப்பித்த பட்டதாரிகள் தங்கள் விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை ஆன்லைனில் நாளைக்குள் (மே 23) மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT