துபாய் கோல்ட் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள தங்கச் சாலை திட்டத்தின் வரைப்படம்.
துபாய்: தங்கம் விலை பவுன் ரூ.1.24 லட்சத்தை தாண்டி விற்பனையாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் துபாயில் கோல்ட் மாவட்டத்தில் நகைக் கடைகள் இருக்கும் பகுதியில் தங்க சாலை அமைக்கும் திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் கோல்ட் மாவட்டம் கோல்ட் சவுக் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட தங்க நகைக் கடைகள் அமைந்துள்ளன. இதன் அருகில் உள்ள தியரா பகுதியிலும் தங்கம் தொடர்பான வர்த்தகம்தான் நடைபெறுகிறது. துபாய் வர்த்தகம் மற்றும் பாரம்பரியத்தில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த 2024-25-ம் நிதியாண்டில் ஐக்கிய அரபு அமீரகம் 53.41 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.4 லட்சத்து 84 ஆயிரம் கோடி) மதிப்பிலான தங்க நகைகளை ஏற்றுமதி செய்துள்ளது. இது தவிர முதலீடு சேவைகள் நிறுவனங்கள் மற்றும் ஆடம்பர பொருட்கள் விற்பனையும் இங்கு நடைபெறுகிறது.
இந்தியா, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, ஹாங்காங், துருக்கி உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து தங்கநகை வியாபாரிகளும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் இப்பகுதியில் தங்கத்தில் சாலை அமைக்கும் திட்டத்தை துபாய் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சர்வதேச பார்வையாளர்கள், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைப்பதற்கான கட்டுமான விவரங்கள், காலக்கெடு ஆகியவை படிப்படியாக அறிவிக்கப்படவுள்ளன. இங்கு தங்கச் சாலை அமைக்கப்பட்டால், இது உலகின் முதல் தங்கச் சாலையாக இருக்கும்.