வணிகம்

தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி நீடிப்பது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை

போத்தி ராஜ்.க

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இது, இந்தியச் சந்தையில் எதிரொலித்தாலும், தாக்கம் ஓரளவே இருக்கிறது. இன்னும் சவரன் விலை ஒரு லட்சத்துக்கு கீழாக இறங்கவில்லை என்பது எளிய குடும்பத்தினருக்கு ஏக்கத்துக்குரியதாகவே இருந்து வருகிறது.

7 மாதங்களில் முதல் முறை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து, ஒரு அவுன்ஸ் (28.34 கிராம்) 4,000 டாலருக்கும் கீழ் சரிந்தது. கடந்த நவம்பர் மாதத்துக்குப் பின் தங்கம் விலை இந்த அளவு குறைந்தது இதுதான் முதல் முறையாகும். அதேபோல வெள்ளி விலையும் வெகுவாக குறைந்திருக்கிறது.

சென்னையில் இன்று (ஜூன் 25) சில்லரை வர்த்தகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரன் விலை ரூ.1,680 குறைந்து ரூ.1,05,120-க்கு விற்பனை ஆகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,000-க்கும் மேலாக குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் அவுன்ஸ் கணக்கில் மதிப்பிடப்படுகிறது. ஒரு அவுன்ஸ் என்பது இந்தியாவின் எடை மதிப்பில் 28.34 கிராமாகும். தோரயமாக 3.50 சவரன் ஆகும்.

28% விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் இருந்து படிப்படியாக குறைந்து வந்தது. புதன்கிழமை வர்த்தகத்தின் முடிவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 டாலருக்கும் கீழ் சரிந்து, 3,999.33 டாலராக இருந்தது.

கடந்த ஜனவரி 29-ம் தேதி வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,594.82 டாலராக உயர்ந்தது. அதிலில் இருந்து தற்போது 28 சதவீதம் தங்கம் விலை சரிந்து கடந்த 7 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தங்கம் விலை ஜூன் மாதம் வரையிலான 2-வது காலாண்டில், 12 சதவீதம் குறைந்துள்ளது. இது கடந்த 2016 டிசம்பர் மாதத்துக்குப் பின் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாகும்.

அதேபோல வெள்ளியின் விலையும் 17.6% வரை குறைந்துள்ளது, இது 2022 ஜூன் மாதத்துக்குப் பின் ஏற்பட்ட பெரிய விலை வீழ்ச்சியாகும். கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை தங்கத்தின் விலை 10 சதவீதம் அதிகரித்தது. 2025-ம் ஆண்டில் 65 சதவீதமும், 2024-ம் ஆண்டில் 28 சதவீதமும் உயர்ந்தது.

பாதாளத்தில் பாய்ந்த வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் கடந்த இரு வாரங்களாகவே குறைந்து வந்தது. இந்த வாரத்தில் மட்டும் வெள்ளி விலை 14% சரிந்து கடந்த 7 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியைச் சந்தித்தது. ஒரு அவுன்ஸ் வெள்ளி 56.99 டாலராக சரிந்துள்ளது. இது கடந்த ஜனவரி மாதத்தில் உச்சகட்டமாக ஒரு அவுன்ஸ் வெள்ளி 121.78 டாலராக இருந்த நிலையில், அதில் பாதியளவு குறைந்து, 56.99 டாலராக வீழ்ச்சியடைந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்த உச்சத்தில் இருந்து தற்போது 53% விலை வீழ்ச்சியை வெள்ளி சந்தித்தது.

அதேசமயம், வெள்ளியின் விலை 2026 ஜனவரி முதல் மார்ச் வரை 28 சதவீதம் அதிகரித்தது. 2025-ல் 148 சதவீதமும், 2024-ல் 22% மட்டுமே விலை உயர்ந்தது. கடந்த ஜனவரியில் ஒரு கிலோ வெள்ளி கட்டி ரூ.4 லட்சத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி கிலோ ரூ.2.14 லட்சமாக சரிந்திருக்கிறது. குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரியும்போது, அதன் எதிரொலியாக வெள்ளியும் குறையும். பெரும்பாலான நேரங்களில் ஒரு உலோகத்தின் விலை மற்றொரு உலோகத்தின் விலையை பாதிக்கும். சில நேரங்களில் மட்டுமே இந்த தாக்கம் இருக்காது. ஆதலால், வெள்ளியின் இந்த பாதாள வீழ்ச்சிக்கு தங்கத்தின் விலை சரிவும் காரணங்களில் ஒன்று என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். வெள்ளி கடந்த 2 வாரங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் வரை சரிந்துள்ளது கவனிக்கத்தக்கது.

தங்கம் விலை உயர்ந்ததும் சரிவதும் ஏன்?

கடந்த ஜனவரி மாதத்தில் வரலாற்றில் இல்லாத அளவாக தங்கம் ஒரு அவுன்ஸ் 5,600 டாலராக இருந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ரஷ்யா, ஈரான், நாடுகள் மீது விதித்த வரிகள், சர்வதேச பதற்றம், ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றம், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்தது ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதினர். இதனால் டாலர் மீதான முதலீட்டைக் குறைத்து, தங்கத்தின் மீது முதலீடு செய்தும், தங்கத்தை அதிகளவு வாங்கியதால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எகிறியது.

ஜனவரியில் இருந்து தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. அதிலும் ஈரான - அமெரிக்கா இடையிலான போர் பிப்ரவரி மாதம் தொடங்கியபின் தங்கத்தின் மீதான முதலீட்டு மோகம் அதிகரித்தது தொடர்ந்து உயர்ந்து வந்தது.

ஆனால், ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியானது முதல் தங்கத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. சர்வதேச சூழலில் இருந்த பதற்ற நிலை மாறியது, மத்திய கிழக்கில் இருந்த போர் மேகம் விலகியதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது.

அதுமட்டுமல்லாமல் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் கெவின் வார்ஷ் கடந்த வாரம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை என்றபோதிலும், எதிர்காலத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் சூழல் இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்காவில் நிலவும் பணவீக்கத்தைக் குறைக்கும் வகையில் எடுக்கப்படும் கட்டுப்பாடுகளால் டாலர் மதிப்பு வலிமை பெறத் தொடங்கியது. எதிர்காலத்தில் ஃபெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பால் தங்கத்தின் மீது முதலீடு செய்த முதலீட்டாளர்கள் டாலர் பக்கமும், அமெரிக்கச் சந்தை பக்கமும் திரும்பினர். அமெரிக்க கடன் பத்திரங்கள், பங்குப் பத்திரங்கள் மீது தங்கள் கவனத்தைத் திருப்பியதால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறையத் தொடங்கியது.

மேலும், ஈரான் - அமெரிக்கா போரின்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் பங்குகள் மீது சர்வதேச முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தினர். ஆனால், ஹார்முஸ் நீரிணை தற்போது திறக்கப்பட்டு, சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கியதால், கச்சா எண்ணெய் விலையும் சீரடைந்துள்ளது. இதுவும் தங்கம் விலை சரிவுக்கு காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

வெள்ளியை சாய்த்த சீனா?

எஸ்எம்சி குலோபல் செக்யூரிட்டின் நிறுவனத்தின் தலைமை சந்தை ஆராய்ச்சியாளர் வந்தனா பாரதி கூறுகையில் “வெள்ளி விலை சரிவுக்கு பொருளாதாரத்தில் ‘டோமினோ விளைவு’ என்று சொல்லப்படுகிறது. அதாவது, சங்கிலித் தொடர் போன்று, ஒரு சம்பவத்தின் தாக்கம் மற்றொன்றில் ஏற்பட்டு அடுத்தடுத்து பாதிக்கப்படுவதாகும். அதுதான் சர்வதேச சந்தையில் நடந்துள்ளது. மிகப் பெரிய அளவில் வெள்ளி விற்பனைக்கு வரும்போது விலை குறையத்தானே செய்யும்.

இந்த விலை குறைவுக்கு பின்னணியில் சீனா இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால், சீனாவில் உள்ள வங்கிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் கடுமையான இடர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் வெள்ளி மீதான ஊக வணிகம் செய்வது குறைந்தது. வெள்ளியை அதிகமாக வாங்கும் நாடு என்ற நிலையில் இருந்து சீனா ஏற்றுமதியாளராக மாறியது. சந்தையில் வெள்ளியின் சப்ளையை அதிகரித்து, தேவையின் அளவை குறைத்து, விலை சரிவுக்கு காரணமாகியது” எனத் தெரிவித்தார்

SCROLL FOR NEXT