வணிகம்

“34 லட்சம் வேலைவாய்ப்புக்கு உறுதி செய்துள்ளோம்!” - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

செய்திப்பிரிவு

கோவை: “திமுக அரசால் இதுவரை நடத்தப்பட்ட 17 முதலீட்டாளர்கள் மாநாட்டின் விளைவாக, 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன்மூலமாக, 11 லட்சத்து 40 ஆயிரத்து 731 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு, நேரடியாகவும், மறைமுகமாகவும் 34 லட்சம் பேருக்கும் மேல் வேலைவாய்ப்புகள் பெறுவதை உறுதி செய்திருக்கிறோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ. 43,844 கோடி முதலீட்டில் 1,00,709 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த ‘TN Rising’ முதலீட்டாளர்கள் மாநாடு 2025-ல் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் பேசியது:

“திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும், தமிழ்நாட்டு வளர்ச்சியும் பிரிக்க முடியாதது. ஏனென்றால், இந்த தமிழ்நாடு, அறிவுத் தரத்திலும், உழைப்பிலும், சாதனைகள் படைப்பதிலும் உலக நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பது எங்களின் லட்சியம். அந்த இலட்சியத்தை அடையவேண்டும் என்ற வேட்கை எங்களுக்குள்ளே இருப்பதால்தான் தொலைநோக்குப் பார்வையுடன் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் 25 ஆண்டுகள் அட்வான்ஸ் ஆக சிந்தித்து, திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதும், அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலான, சீரான வளர்ச்சி இருக்க வேண்டும் என்று சொன்னேன். அதனால், தொழில்துறையைச் சேர்ந்த யாரை நான் சந்தித்தாலும், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வாருங்கள் என்று கோரிக்கை வைப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல், சிறிய அளவிலும், பெரிய அளவிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, தமிழ்நாட்டில் இருக்கின்ற வாய்ப்புகளை எடுத்துச் சொல்லி, முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறோம். யுஏஇ, சிங்கப்பூர் , ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் நானே நேரடியாக சென்று பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை எல்லாம் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறேன்.

இப்படி நடத்தப்பட்ட 17 முதலீட்டாளர்கள் மாநாட்டின் விளைவாக இதுவரை 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆட்சிக் காலத்தின் கடைசி நான்கு ஆண்டுகளைவிட இரண்டரை மடங்கு அதிகம். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, 11 லட்சத்து 40 ஆயிரத்து 731 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டு, நேரடியாகவும், மறைமுகமாகவும் 34 லட்சம் பேருக்கும் மேல், வேலைவாய்ப்புகள் பெறுவதை உறுதி செய்திருக்கிறோம்.

எத்தனையோ மாநிலங்கள் இருக்கிறது. எத்தனையோ அரசுகள் இருக்கிறது. அவர்களும் கூட, அவர்கள் மாநிலம் வளர வேண்டும் என்று முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துகிறார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுகிறார்கள். ஆனால், அதன் ‘கன்வெர்ஷன் ரேட்’ என்ன? எத்தனை ஒப்பந்தங்கள் தொழிற்சாலைகளாக மாறுகிறது? அதற்குள் நான் போக விரும்பவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், கன்வெர்ஷன் ரேட் 80 சதவீதம் ஆகும்.

நம்முடைய திராவிட மாடல் அரசில் போடப்பட்டிருக்கின்ற 1, 016 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், நிலம் வழங்குவது, வணிக உற்பத்தி, சோதனை உற்பத்தி, கட்டுமானம் தொடங்கப்பட்டது என்று 809 திட்டங்கள், பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் இருக்கிறது. அதுமட்டுமல்ல, புது ஐடியாவோடு இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வந்தாலும், இந்த திராவிட மாடல் அரசு, அவர்களுக்கும் ஆதரவாக இருக்கிறது.

கடந்த மாதம் கூட இதே கோவைக்கு வந்து, உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தேன். அதில் பங்கேற்ற இளைஞர்கள், எந்த அளவிற்கு திராவிட மாடல் அரசு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் சொல்லியிருந்தார்கள். 45-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, 30 ஆயிரம் பேருக்கு மேல், அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.

அதுமட்டுமல்ல, சிறிய சிறிய நகரங்களுக்குக் கூட சென்று, StartUp TN மூலமாக இளைஞர்களை தொழில் தொடங்க ஊக்குவிக்கிறோம். அதனால், இப்போது தமிழ்நாட்டில் இருக்கின்ற StartUp நிறுவனங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 12,663. மே 2021 வரை 2,146 நிறுவனங்கள்தான் இருந்தது. நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில், 12,663 என்ற வரலாற்று உயரத்தை தொட்டிருக்கிறோம்.

இத்தனை நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்குக் காரணம் என்ன? வெளிப்படைத் தன்மையுடன் இந்த அரசு செயல்படுகிறது. திறன் மிக்க, படித்த இளைஞர்கள் இங்கே இருக்கிறார்கள். ‘பிசினஸ் ஃபிரண்ட்லி’ சூழல் இங்கே நிலவுகிறது. சட்டம் - ஒழுங்கு இங்கு சரியாக இருக்கிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள், அரசியல் காரணங்களுக்காக தவறான டேட்டாவையும், தவறான நியூசையும் பரப்புகிறார்கள். ஆனால், உண்மையான டேட்டாவை சொல்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 62 ஆயிரத்து 413 நிறுவனங்கள் இருந்த தமிழ்நாட்டில், இப்போது, 79 ஆயிரத்து 185 நிறுவனங்கள் இருக்கிறது. அதாவது, 16 ஆயிரத்து 772 நிறுவனங்கள் அதிகரித்திருக்கிறது.

புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு பிஎஃப் கணக்கு தொடங்கி அதை பராமரிக்கின்றது ஒன்றிய அரசு. அதன்படி நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, 29 லட்சத்து 64 ஆயிரம் பணியாளர்கள் அதிகரித்திருப்பதாக டேட்டாவை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இதைவிட தொழில் வளர்ச்சியில், தமிழ்நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதற்கு டேட்டா தேவையா?

அடுத்ததாக, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய சில நிறுவனங்கள் வெளி மாநிலத்திற்குப் போவதாகவும் தொடர்ந்து செய்தியை உருவாக்குகிறார்கள். இந்த செய்திகளை உருவாக்குவது யார் என்று பார்த்தால், அவர்களுடைய நோக்கம் என்னவென்று புரியும். அதைவிட அவர்கள் ஏன் இந்த செய்திகளை பரப்புகிறார்கள் என்று யோசித்தபோதும் நமக்கு தெரிந்துவிடும்.

கடந்த நான்கரை ஆண்டு கால நம்முடைய ஆட்சியில், தமிழ்நாட்டிற்கு வந்த முதலீடுகளை பார்த்து அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏன் வரவேற்புரை ஆற்றி பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சொன்னாரே, இந்த மேற்கு மண்டலத்திற்கு மட்டும் எவ்வளவு முதலீடுகள் வந்திருக்கிறது என்று புள்ளிவிபரத்தோடு சொன்னார். இதனால் தான், அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

நான் தெளிவாக சொல்கிறேன், தொழில் முதலீடுகளை கொண்டு வருவது என்பது சாதாரண விஷயமில்லை. பலத்த போட்டிகளிடையே இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இந்திய மாநிலங்களுக்கு மட்டுமல்ல, வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளுக்குக் கூட போட்டிப் போட்டு இந்த முதலீடுகளை தமிழ்நாடுக்கு கொண்டு வருகிறோம். அதிலும், எந்த மாதிரியான முதலீடுகளை, எவ்வளவு சலுகைகளை கொடுத்து கொண்டு வருவது என்பதிலும் கவனம் செலுத்துகிறோம்.

எத்தனை கோடி முதலீடுகள் என்பதைவிட அது தமிழ்நாட்டிற்கு உகந்ததா? இங்கே இருக்கின்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடிகிறதா? என சிந்தித்துதான் கொண்டு வருகிறோம். அத்துடன், நம்முடைய நிதி நிலைமைக்கு ஏற்ப முறையான சலுகைகள் கொடுத்துத்தான் இந்த முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுகிறோம்.

முதலீட்டாளர்கள் கேட்கின்ற சலுகைகளையும், அந்த முதலீடுகளால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கக்கூடிய பலன்களையும் ஒப்பிட்டுத்தான் சரியான முடிவை எடுக்கிறோம். அதனால், தமிழ்நாடு இப்போது அடைந்திருக்கக்கூடிய வளர்ச்சியை இன்னும் அதிகப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்து, பார்த்து திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்! அப்படி, தூத்துக்குடி, ஓசூரைத் தொடர்ந்து இப்போது கோவையில் TN RISING மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த கோவையின் தொழில் சூழலை மேம்படுத்த செய்யப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய சில பணிகளை மட்டும், இங்கே எடுத்துச் சொல்ல வேண்டும் என்றால், வாரப்பட்டியில், ‘பாதுகாப்புத் துறை உபகரணங்கள் பூங்கா’ அமைத்திருக்கிறோம். ஏற்கனவே, 20 தொழிற்சாலைகள் - StartUp நிறுவனங்கள் - M.S.M.E.-க்களுக்கு 57 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில், உட்கட்டமைப்பு வசதிகள் நிறைவடைகின்ற நிலையில் இருக்கிறது.

சூலூரில், 200 ஏக்கர் பரப்பளவில், ‘வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் பூங்கா‘ அமைத்துக் கொண்டிருக்கிறோம். ஏரோ டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் - M.R.O. - ரோபோடிக்ஸ் - எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில், StartUp மற்றும் M.S.M.E. நிறுவனங்கள் பயனடைகின்ற வகையில், ‘டிட்கோ’ நிறுவனம் - Tata டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து, பொதுப் பொறியியல் வசதி மையத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது.

சூலூர் வட்டத்தில், கரவல்லி-மாதப்பூர், கனியூர் மற்றும் ராசிப்பாளையத்தில், ‘பன்முகப் போக்குவரத்து பூங்கா’வை அமைக்கப் போகிறோம்.

‘செமிகண்டக்டர் மிஷன் - 2030’ என்ற இலக்குப்படி, சூலூர் மற்றும் பல்லடத்தில், ‘செமிகண்டக்டர் பூங்கா’ அமைக்கப் போகிறோம். இத்துடன், ஆவாரம்பாளையத்தில் உயர்தர பம்புகள் மற்றும் மோட்டார் உற்பத்திக்கான திறன்மிகு மையத்துக்கும், மூப்பேரிபாளையத்தில் வார்ப்புகள் மற்றும் உலோக வடிவமைப்பு மேம்பாட்டிற்கான திறன்மிகு மையத்துக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.

தொழிலும், கல்வித் துறையும் சேர்ந்து அறிவுப் பொருளாதாரம் உருவாக வேண்டும். அதற்காகத்தான், ‘தமிழ்நாடு பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பூங்கா அறக்கட்டளை’ என்கிற புதிய நிறுவனத்தை அமைத்திருக்கிறோம். புதுமைக்குப் பெயர்பெற்ற கோவை மண்டலத்தில், இந்த நிறுவனம்

2 கோடியே 58 இலட்சம் ரூபாய் மானியத்துடன் பயன்பாட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதியளிக்கிறது. இந்தத் திட்டங்களுக்கான முதல் தவணையாக 78 இலட்சம் ரூபாயை ஆராய்ச்சியாளர்களிடம் இந்த நிகழ்ச்சியில் வழங்கி இருக்கிறோம்.

இதுபோன்று, உங்களுக்கு என்ன தேவை என்று பார்த்து, பார்த்து செய்து தந்த காரணத்தால் தான், சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்ட “Ease of doing Business” தரவரிசையில், நான்கு பிரிவுகளில், தமிழ்நாட்டிற்கு சாதனையாளர் என்ற அங்கீகாரத்தைக் வழங்கியிருக்கிறார்கள். எனவே, இன்றைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிறுவனங்கள், அடிக்கல் நாட்டி - திறப்பு விழாவுக்கு தயாராகிவிடலாம் என்று உறுதியாக சொல்ல முடியும்.

மற்ற முதலீட்டாளர்கள் மாநாடுகளைவிட இந்த மாநாட்டிற்கு ஒரு தனி சிறப்பு இருக்கிறது. அது என்னவென்றால், மொத்த முதலீடுகளில், உள்ளூர் முதலீட்டாளர்கள் பங்களிப்பு என்பது இந்த மாநாட்டில் தான் மிக அதிகமாக இருக்கிறது. இந்த மேற்கு பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும், தொழில் முனைவோர் நிறுவனத்திற்கும் இதைவிட வேறு சாட்சி வேண்டுமா?!

இங்கே கூடியிருக்கின்ற உங்களுக்கெல்லாம் நான் உறுதியாக சொல்கிறேன். தமிழ்நாட்டில் முதலீடு செய்கின்ற உங்கள் திட்டங்களுக்கு, எந்தவித தாமதமும் ஏற்படாது; எந்தவித தலையீடுகளும் இருக்காது. இங்கே அனைத்தும் வேகமாக, தெளிவாக, வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். இந்த அரசு, தொழில் நிறுவனங்கள் மற்றும் மக்களுடன், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறோம்.

ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி திராவிட மாடல் ஆட்சி இன்றைக்கு வேகமாக நடைபோடுகிறது. தமிழ்நாட்டு இளைஞர்களைப் பற்றி நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பது இல்லை. கடுமையாக, நேர்மையாக உழைப்பவர்கள். புத்தாக்க சிந்தனை கொண்டவர்கள்.

அப்படிப்பட்ட எங்களுடைய இளைஞர்களை இன்னும் Up-skill செய்யத்தான், ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். உங்களுக்குத் தேவையான மனிதவள ஆற்றல், இங்கே குறைவில்லாமல் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்தீர்கள் என்றால், தமிழ்நாடு மட்டுமல்ல, உங்கள் பிசினசும் பல மடங்கு வளரும். இந்த சந்திப்பு, நம்முடைய வளர்ச்சிக்கான ஒரு தொடக்கம் மட்டும்தான். நீங்கள் தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்வெஸ்ட் செய்ய வேண்டும். நீங்கள் மட்டுமல்ல, உங்கள் நண்பர்களுக்கும் இங்கே இருக்கின்ற வாய்ப்புகளை எடுத்துச் சொல்லி, முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் எண்ணங்கள் செயலாகும். உங்கள் வெற்றிகள் தொடங்கும் இன்று, 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட, 170 திட்டங்கள் - 43 ஆயிரத்து 844 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மூலமாக, 1 லட்சத்து 709 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கவுள்ள உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT