வந்தே பாரத் ரயில்
ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்றும், இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு ரயில்வேயின் சார்பாக சென்னை சென்ட்ரல் - மைசூரு, கோவை, - விஜயவாடா, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, நாகர்கோவில் உட்பட 10-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற விரைவு ரயில்களை காட்டிலும் வந்தே பாரத் ரயில் வேகமாகவும், சொகுசாகவும் இருப்பதால், பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
சேது எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் - சென்னை எக்ஸ்பிரஸ், பாம்பன் எக்ஸ்பிரஸ் என தினந்தோறும் ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு மூன்று ரயில்கள் சென்னைக்கு இயக்கப்படுகிறது. இவை யாவும் இரவு நேர ரயில்களாக உள்ளன.
நீண்ட காலமாக ராமேசுவரத்திலிருந்து பகல் நேரத்தில், சென்னைக்கு ரயில் சேவை இயக்கப்பட வேண்டும் என்று ரயில்வே அமைச்சகத்துக்கு பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில், எழும்பூர் - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் ராமேசுவரம் - சென்னை எழும்பூர் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த வந்தே பாரத் ரயிலுக்கான நேர அட்டவணையை ரயில்வே நிர்வாகம் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டது. ராமேசுவரம் - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கும், சிவகங்கையில் இருந்து மாலை 4.10 மணிக்கும், காரைக்குடியில் இருந்து மாலை 4.40 மணிக்கும், புதுக்கோட்டையில் இருந்து மாலை 5.10 மணிக்கும், திருச்சியில் இருந்து மாலை 6.10 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து இரவு 8.15 மணிக்கும், தாம்பரத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கும் புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த ரயில் சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5.52 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து காலை 7.20 மணிக்கும், திருச்சியில் இருந்து காலை 9.20 மணிக்கும், புதுக்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்கும், காரைக்குடியில் இருந்து காலை 10.40 மணிக்கும், சிவகங்கையில் இருந்து நண்பகல் 11.15 மணிக்கும், ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 12.15 மணிக்கும் புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு ராமேசுவரம் வந்தடைகிறது.
இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தனது தமிழக வருகையின்போது தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.