புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாட்கள் விலக்கு அறிவித்துள்ளது அமெரிக்கா. இருப்பினும், இதில் சில கட்டுப்பாடுகள் இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்துள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.
இந்தப் போர் தொடர்ந்தால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நாடுகளில் வரும் நாட்களில் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலில் சரக்கு கப்பலில் உள்ள ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா தற்காலிக அனுமதி அளித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தற்போது வாங்கும் கச்சா எண்ணெய் சரக்கு (கார்கோ) பெட்டகத்தில், அமெரிக்கா இப்போது அறிவித்துள்ள தற்காலிக அனுமதிக்கு முன்னதாக ஏற்றப்பட்டு இருக்க வேண்டும். அதேபோல, அமெரிக்காவின் வரி ஏற்ற அறிவிப்பின் காரணமாக மற்ற நாடுகளுக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு, கடலில் தேக்கம் அடைந்திருக்கும் ரஷ்ய கச்சா எண்ணெய் சரக்குகளையும் இந்தியா இப்போது வாங்கலாம் என சில கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரஷ்யா - இந்தியா - அமெரிக்கா: கச்சா எண்ணெய் பின்னணி
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தின. இந்தியா தொடர்ந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கியது. இது உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவை ஊக்குவிப்பதாக இருக்கும் என்று இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்தார் ட்ரம்ப்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் இந்தியாவுக்கான வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது, இதையடுத்து கடந்த சில வாரங்களாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்தது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கச்சா எண்ணெய் வாங்குவது கண்டுபிடிக்கப்பட்டால், அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரியை மீண்டும் விதிக்கும் எனவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இதில்தான் இந்தியாவுக்கு விலக்கு அறிவித்துள்ளது அமெரிக்கா.
இதனிடையே, இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய ரஷ்யா எப்போதும் தயார் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.