தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, கடந்த திமுக அரசின் செயல்பாடுகள், நிதிநிலை குறித்தும், எதிர்கால சவால்கள், தீர்வுகள், நடவடிக்கைகள் குறித்தும் கடந்த 16-ம் தேதி வெள்ளை அறிக்கை வெளியிட்டது. அதில் தமிழகத்தின் கடன் சுமை கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5.13 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 லட்சம் கோடியாக இருமடங்காக அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்துறை, போக்குவரத்துத் துறை கடனையும் சேர்த்தால் உண்மைக் கடன் ரூ.13 லட்சம் கோடிக்கும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் தனிநபர் ஒவ்வொருவர் மீதும் ரூ.1,28,934 கடன் இருப்பதாக நிதியமைச்சர் மரிய வில்சன் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதுதவிர, வாங்கிய கடனுக்கான வட்டி செலுத்துதல் அதிகரிப்பு, வருவாய் பற்றாக்குறை உயர்வு, மாநிலத்தின் சொந்த வரி வசூல் சரிவு, வருவாயைவிட மூலதனத்துக்கான செலவு மற்றும் புதிய முதலீட்டுக்கான செலவு ஆகியவை குறித்தும் பட்டியலிடப்பட்டுள்ளது.
முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஒரு முக்கிய அம்சத்தை நம்மில் பெரும்பாலானோர் மிக எளிதாக, அதன் தீவிரமான தாக்கம் தெரியாமல் கடந்துவிட்டோம். அது, தமிழகத்தில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்பதும், கேரளாவை விட வேகமாக முதியோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்பதும் ஆகும்.
தமிழகத்தில் 2011-ம் ஆண்டில் 10.6 சதவீதமாக இருந்த முதியோர் எண்ணிக்கை, 2031-ம் ஆண்டுக்குள் 18.2 சதவீதமாக அதிகரிக்கும். இது எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 71.7 சதவீத வளர்ச்சி என்று வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் சராசரி வளர்ச்சி 56 சதவீதமாக இருக்கும் நிலையிலும், மகாராஷ்டிரா (50%), கர்நாடகா (56.3%) போன்ற மாநிலங்களில் 50 சதவீதத்தை தாண்டாத நிலையிலும், தமிழகத்தில் முதியோர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும் என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசு என்ன சொல்கிறது?
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டின் மக்கள் தொகையில் வேகமான மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக முதியோர் எண்ணிக்கை (60 வயதுக்கு மேற்பட்டோர்) அதிகரித்து வருகிறது. 2011-ல் 10 கோடியாக இருந்த முதியோர் எண்ணிக்கை, 2036-ம் ஆண்டுக்குள் 23 கோடியாக அதிகரிக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, 7 இந்தியர்களில் ஒருவர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக இருப்பார். இந்த மாற்றத்தை மனதில் வைத்து எதிர்காலத்தில் பல்வேறு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும், தமிழகம், கேரளா தவிர்த்து இமாச்சலப் பிரதேச மாநிலத்திலும் முதியோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேரளாவில் 2011-ல் 13% ஆக இருந்த முதியோர் எண்ணிக்கை, 2036-ம் ஆண்டுக்குள் 23% ஆக உயர்ந்து, நாட்டிலேயே அதிக முதியோரைக் கொண்ட மாநிலமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், உத்தரப் பிரதேசத்தில் மிகக் குறைவாக 12 சதவீதம் மட்டுமே முதியோர் இருப்பர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில், முதியோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், 2046-ம் ஆண்டில் இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை, 0-14 வயதுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைவிட அதிகரித்துவிடும் என்பதே அதிர்ச்சிக்குரிய புள்ளிவிவரமாகும். தற்போதைய நிலையில் 7 நபர்களில் ஒருவர் முதியோராக இருக்கும்போது, 2050-ம் ஆண்டில் 5 நபர்களில் ஒருவர் முதியோராக இருப்பார்கள்.
பொருளாதாரத்தில் என்ன நெருக்கடி வரலாம்?
முதியோர்கள் இந்தச் சமூகத்தின் அல்லது ஒவ்வொரு வீட்டின் சுமைகள் அல்ல என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களும் ஒரு காலத்தில் உழைத்து, நாட்டின் முன்னேற்றத்துக்கும், வீட்டின் வளர்ச்சிக்கும், பிள்ளைகளை வளர்ப்பதற்கும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்தான். வயது மூப்பின் காரணமாக அவர்களின் செயல்பாடுகள் குறைந்து, ஓய்வு நிலைக்கு (உற்பத்திசாரா பிரிவுக்குள்) சென்றுவிட்டார்கள், அவ்வளவுதான்.
உழைக்கும் பிரிவினர் எண்ணிக்கை குறைந்து, முதியோர் எண்ணிக்கை உயரும் நிலை எதிர்காலத்தில் தேசிய அளவிலும் எதிரொலிக்கும். பொருளாதாரத்தில் உழைக்கும் வயதுடைய பிரிவினர் (15-59 வயது - Productive segment) என்றும், உற்பத்திசாரா பிரிவினர் (Unproductive segment) என்றும் பிரிக்கப்படுகிறார்கள். இதில் உற்பத்திசாரா பிரிவில் முதியோர்கள் மட்டுமல்லாது, 0-14 வயதுடைய குழந்தைகளும் வருவார்கள்.
பொருளாதார வளர்ச்சிக்குத் துணையாக இருக்கும் இந்த உழைக்கும் வயதுடைய (15-59 வயது) பிரிவினர், 2021-ல் தமிழகத்தில் ஏறக்குறைய 66.4% ஆக இருந்த நிலையில், 2036-ம் ஆண்டில் இந்தப் பிரிவினர் 63.6% ஆகக் குறைவர். இதனால் தமிழக அரசு எதிர்காலத்தில் குறிப்பாக, முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை அதிகப்படுத்த வேண்டிய நிர்பந்தமும் நெருக்கடியும் அதிகரிக்கும்.
அதேவேளையில், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை குறையும்போது, அரசுக்கு வரி வருவாயில் தொய்வு ஏற்படும். இதனால் உழைக்கும் ஒரு சிறிய பிரிவினர், தங்களைச் சார்ந்திருக்கும் பெரிய தொகையிலான முதியோர் மற்றும் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய சமூக அழுத்தத்துக்கு ஆளாவார்கள். வளர்ச்சித் திட்டங்களுக்காக அரசு மேலும் கடன் பெற வேண்டிய நெருக்கடியும் உருவாகும்.
அரசு தனது முதலீட்டுத் திட்டங்கள், மூலதனச் செலவு ஆகியவற்றைக் கணிசமாகக் குறைத்து, முதியோர் நலன், பாதுகாப்பு, மானியம், சலுகைகள், மருத்துவம், மனநலம், குழந்தைகள் நலன், கல்வி போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
முதியோர் விகிதம்: அன்றும் பின்னும்
மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, 1961-ல் தேசிய அளவிலும் தமிழகத்திலும் முதியோர் எண்ணிக்கை விகிதம் ஒரே மாதிரியாக 5.6 சதவீதமாக இருந்தது. ஆனால், இது படிப்படியாக உயர்ந்து 2001-ல் தேசிய அளவில் 6.9 சதவீதமாக அதிகரித்தபோது, தமிழகத்தில் 9% ஆக உயர்ந்தது. 2011-ல் தேசிய அளவில் 8.3 சதவீதமாக இருந்தபோது, தமிழகத்தில் 11.2 சதவீதமாக அதிகரித்தது. தற்போதைய காலகட்டத்தில் (2026 வாக்கில்) தேசிய சராசரி 12.4 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் இது 17.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2011 முதல் 2026-க்குள் மிகக் குறுகிய இடைவெளியில் தமிழகத்தில் முதியோர் எண்ணிக்கை சுமார் 6% உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.
முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என்ன?
தமிழகத்தில் முதியோர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதற்குக் காரணியாக இருக்கும் நேர்மறையான முதல் விஷயம், தமிழகத்தின் வலுவான மருத்துவக் கட்டமைப்பு வசதிதான். தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்த அரசுகள், மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்தை மருத்துவத் துறையில் முன்னோடியாக மாற்றியுள்ளன. இதனால் கிராமங்கள்தோறும் சிறந்த மருத்துவச் சிகிச்சையும், காப்பீட்டு வசதிகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, இந்தச் சிறந்த மருத்துவச் சிகிச்சையாலும், நவீன மருந்துகளாலும் பெரிய நோய்களில் இருந்து முதியோர்கள் தங்களைக் காத்துக் கொள்ள முடிகிறது. இதனால் அவர்களின் வாழ்நாள் அதிகரித்துள்ளது. தேசிய அளவிலான சராசரியைவிட, தமிழகத்தில் முதியோர்கள் வாழும் சராசரி வயது உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், முதியோருக்கான இலவச மருத்துவக் காப்பீடு, முதியோர் ஓய்வூதியம், பேருந்துகளில் சலுகைக் கட்டணம், மருத்துவமனைகளில் முன்னுரிமை எனப் பல்வேறு அம்சங்கள் சிறப்பாக இருப்பதால், முதியோரின் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ‘மக்களைத் தேடி மருத்துவம்’ போன்ற திட்டங்கள் மூலம் இல்லங்களுக்கே சென்று சிகிச்சை அளிப்பது அவர்களின் உடல்நலம் மட்டுமல்லாது மனநலத்தையும் மேம்படுத்தியுள்ளது.
அதேநேரம், தொற்றுநோய்கள் குறைந்திருந்தாலும், ‘என்சிடி’ (NCD) எனப்படும் பரவாத தன்மை கொண்ட நீரிழிவு, பார்கின்சன், ரத்தக் கொதிப்பு, இதய நோய்கள், புற்றுநோய் போன்ற நீண்ட கால நோய்களால் முதியோர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கும் தமிழக அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை மற்றும் மாவட்டங்கள்தோறும் ‘ஜெரியாட்ரிக் மெடிசின்’ (மூத்த குடிமக்கள் மருத்துவப் பிரிவு) தொடங்கப்பட்டிருப்பது முக்கியக் காரணமாகும்.
மறுபுறம், கூட்டுக் குடும்ப முறை சிதைந்து வருவதும், தனிக்குடும்ப கலாச்சாரமும் முதியவர்களை முதுமை சார்ந்த நோய்கள், தனிமை, வறுமை மற்றும் பாதுகாப்பின்மை போன்ற புதிய சிக்கல்களுக்குள் தள்ளியுள்ளன.
குழந்தைப் பிறப்பு விகிதம் குறைவு
முதியோர் எண்ணிக்கை விகிதாசாரப்படி அதிகரிப்பதற்குக் காத்திரமான மற்றொரு காரணம், தமிழகத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் சமீபத்திய தசாப்தங்களாகக் குறைந்து வருவதுதான்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ‘பேபி பூமர்ஸ்’ (Baby Boomers) என்ற காலகட்டத்தில் சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 6 முதல் 8 குழந்தைகள் வரை இருந்த நிலை, 1980-களுக்குப் பின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளால் மாறியது.
தமிழகமும் கேரளாவும் மத்திய அரசின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்தி வெற்றிகண்டன. ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்ற விழிப்புணர்வு, ஒரு தலைமுறைக்குத் தகுந்த பலனைத் தந்தாலும், அதன் பொருளாதாரத் தாக்கம் இப்போதுதான் தெரியத் தொடங்கியுள்ளது.
சீனா, ஜப்பான், தைவான், தென்கொரியா போன்ற நாடுகளும் தற்போது இதே உழைக்கும் வயதினர் பற்றாக்குறைச் சிக்கலை எதிர்கொண்டு, தங்களின் மக்கள் தொகைக் கொள்கைகளைத் தளர்த்தி வருகின்றன. சமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட, கூடுதல் குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்குச் சலுகைகளை அறிவித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முதியோர் சந்திக்கும் சவால்கள்
ஆரோக்கியச் சிக்கல்கள்:
வாழ்நாள் அதிகரித்தாலும், என்சிடி (NCD) போன்ற நாள்பட்ட நோய்களுடன் வாழ வேண்டிய கட்டாயம் உடல் ரீதியான அழுத்தத்தைத் தருகிறது.
பொருளாதாரப் பாதுகாப்பு:
ஓய்வுக்குப் பின் வருமானமின்மையால், பிள்ளைகளின் பொருளாதாரத்தைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இது அன்றாட மற்றும் மருத்துவச் செலவுகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
சமூக மற்றும் மனரீதியான பாதிப்பு:
கூட்டுக் குடும்பங்கள் மறைந்து தனிக் குடும்பங்கள் பெருகியதால் ஏற்படும் தனிமை, பாசமின்மை மற்றும் கவனிப்பின்மை முதியோரை மனரீதியாகப் பாதிக்கிறது.
தலைமுறை இடைவெளி (Generation Gap):
இன்றைய ஜென்ஸீ (Gen-Z) தலைமுறையின் வேகத்தோடும், தொழில்நுட்ப வளர்ச்சியோடும் தங்களை ஒத்திசைக்க முடியாமல் முதியோர்கள் தடுமாறுகின்றனர்.
சுயமரியாதைப் பாதிப்பு:
கடைசிவரை சுயமரியாதையோடு வாழ விரும்பினாலும், உடல்நிலைக் குறைவால் பிறரைச் சார்ந்திருக்கிறோம் என்ற எண்ணமே அவர்களுக்குப் பெரும் மன உளைச்சலைத் தருகிறது.
தமிழக அரசுக்குக் காத்திருக்கும் சவால்கள்
> முதியோர்களை வெறும் ‘உற்பத்திசாரா பிரிவு’ என்று ஒதுக்காமல், அவர்களின் அனுபவத்தைப் பயன்படுத்தி பகுதிநேரப் பொருளாதாரப் பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும்.
> மூத்த குடிமக்களின் வங்கி வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவதுடன், மாநில அளவிலான திட்டங்களை வகுக்க வேண்டும்.
> தாழ்தளப் பேருந்துகள் (Low-floor buses) மற்றும் முதியோருக்கான பிரத்யேகப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
> மாநிலத்தில் உள்ள அனைத்து முதியோருக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையான இலவச மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்.
> பிள்ளைகளால் கைவிடப்படும் அல்லது பராமரிக்க இயலாத சூழலில் உள்ள முதியோர்களைப் பாதுகாக்க, தாலுகாதோறும் தரமான அரசு முதியோர் இல்லங்களையும், பகல்நேரப் பராமரிப்பு மையங்களையும் (Daycare centers) அமைக்க வேண்டும்.
> மனநல ஆலோசனை மையங்கள் மற்றும் தனிமையைப் போக்கும் பொழுதுபோக்கு/பயிற்சி மையங்களை உருவாக்குதல்.
> பார்வை மற்றும் காது கேளாமை போன்ற முதுமைக்காலக் குறைபாடுகளுக்கான மருத்துவக் கருவிகளை இலவசமாக வழங்க வேண்டும்.
> பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007-ஐ இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்தி, முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படும் பெற்றோருக்கான பராமரிப்புச் செலவைப் பிள்ளைகள் சட்டபூர்வமாக ஏற்பதை உறுதி செய்ய வேண்டும்.
> முதியோருக்கான சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் தொகையை (Old Age Pension) தற்போதைய பணவீக்கத்துக்கு ஏற்ப உயர்த்த வேண்டும்.
> அனைத்து அரசு மற்றும் பொதுப் பயன்பாட்டுத் தளங்களில் முதியோருக்கான தனி வசதிகள் (Ramps, பிரத்யேக இருக்கைகள்) உருவாக்கப்பட வேண்டும்.
> அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ‘ஜெரியாட்ரிக் மெடிசின்’ பிரிவை விரிவுபடுத்த வேண்டும்.
> தமிழக அரசின் பட்ஜெட்டில் ‘முதியோர் நலன்’ என்ற பிரத்யேகப் பிரிவை உருவாக்கி, எதிர்காலத்தில் இதற்கெனத் தனி அமைச்சகம் அல்லது ஆணையத்தை உருவாக்குவது குறித்துச் சிந்திக்க வேண்டும்.
> மத்திய அரசு செயல்படுத்தி வரும் அடல் வயோ அபியுத்தே யோஜனா (AVYAY), ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா, மூத்த குடிமக்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தும் திட்டம் (SACRED), ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் தங்கு தடையின்றி தமிழக முதியோர்களுக்குக் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.