மும்பை: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் நேற்று கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால், ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.12.78 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
வர்த்தக நேர இறுதியில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,352 புள்ளிகள் சரிந்து 77,566 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 422 புள்ளிகள் சரிந்து 24,028 புள்ளிகளில் நிலைகொண்டது. பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் சுமார் 3.97 சதவீதம் சரிவைக் கண்டன.
இதுபோல வாகனத் துறை பங்குகள் குறியீடு 4% வரை சரிந்தது. எனினும், தகவல் தொழில் நுட்பத் துறை பங்குகள் மட்டும் ஓரளவுக்கு சரிவில் இருந்து மீண்டு ஏற்றத்துடன் வர்த்தகம் ஆனது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா - ஈரான் இடையே போர் தொடங்கியதில் இருந்து இதுவரை முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பில் சுமார் ரூ.31 லட்சம் கோடி அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையால் வெளி நாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் இருந்து தங்கள் முதலீடுகளைத் தொடர்ந்து திரும்பப் பெற்று பெறுவது சந்தையின் செயல்பாட்டை வெகுவாக பாதித்துள்ளது.