புதுடெல்லி: நாடு முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், 20 சதவீத எத்தனால் கலந்த ‘இ20’ ரக பெட்ரோலைக் குறைந்தபட்சம் 95 ஆக்டேன் தரத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வாகனங்களின் இன்ஜின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 95 ஆக்டேன் தரத்தில் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை கட்டாயமாக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆக்டேன் என்பது பெட்ரோல் அதிக அழுத்தத்திலும் சீராக எரிவதைக் குறிக்கும் அளவீடாகும். பெட்ரோலில் எத்தனால் கலக்கும் போது, இன்ஜினுக்குள் எரிபொருள் சீரற்ற முறையில் எரிந்து தேவையற்ற சத்தத்தையும், அதிர்வையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 95 ஆக்டேன் தரம் என்பது இந்தச் சிக்கலைத் தடுத்து இன்ஜினைப் பாதுகாக்கும்.
எத்தனால் இயற்கையிலேயே அதிக ஆக்டேன் (சுமார் 108) கொண்டது. எனவே, எத்தனால் கலப்பால் பெட்ரோல் இன்ஜினின் வேகம் மற்றும் ஆயுள்காலம் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட எத்தனால் கலப்பு பெட்ரோல் மூலம், கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ரூ. 1.40 லட்சம் கோடி அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறைந்துள்ளது. கரும்பு, சோளம் மற்றும் தானியங்களில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுவதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது நாட்டின் பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் ‘இ20’ அல்லது 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் இந்த வகை பெட்ரோலை விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.