மும்பை: கடந்த ஆண்டில் டிஜிட்டல் மோசடி மூலம் மக்கள் ரூ.22,900 கோடி அளவுக்கு பணத்தை இழந்துள்ளனர். இதுதொடர்பாக 28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
யுபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் போன்ற அமைப்புகள் உடனடி பணப்பரிமாற்றத்தைச் செய்வதால், பாதிக்கப்படுபவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஒருவர் யுபிஐ மூலம் மற்றொருவருக்கு ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால், அது உடனே செல்லாது. ஒரு மணி நேரத்துக்கு பின்பே செல்லும். இந்த இடைப்பட்ட நேரத்தில், நாம் பணத்தைத் தவறான நபருக்கு அனுப்பிவிட்டோம் அல்லது மோசடி செய்யப்பட்டுள்ளோம் என்பதை அறிந்தால், நாம் அனுப்பிய பணத்தை ரத்து செய்யும் வசதி கொண்டு வரப்படும்.
ஆனால், ரூ.10,000-க்கும் கீழ் உள்ள பணப்பரிமாற்றத்துக்கு இந்த புதிய விதி பொருந்தாது. இந்த புதிய விதிமுறைகள் தொடர்பாக பொது மக்கள் மற்றும் வங்கித் துறை சார்ந்த நிபுணர்கள் மே 8-ம் தேதி வரை ஆலோசனை தெரிவிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.