கோப்புப்படம்
ராஜபாளையம்: பேண்டேஜ் எனப்படும் மருத்துவத் துணி உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. சீனா 2-ம் இடத்தில் உள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பேண்டேஜ் துணி உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.
இப்பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு விசைத்தறி கூடங்களும்,50-க்கும் மேற்பட்ட பெரிய நூற்பாலைகளும் உள்ளன. இதில் பெரும்பாலான விசைத்தறிகள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களால் குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராஜபாளையம் பகுதியில் தினசரி ரூ.2 கோடி அளவுக்கு பேண்டேஜ் துணி நெசவு செய்யப்படுகிறது.
இதில் விசைத்தறி தொழிலாளர்கள், சிறு விசைத்தறி உரிமையாளர்கள், மருத்துவத் துணி உற்பத்தியாளர்கள், மருத்துவத் துணி ஏற்றுமதியாளர்கள் என 4 படிநிலைகள் உள்ளன. பேண்டேஜ் துணி உற்பத்தியில் தொழிலாளர்களைவிட சிறு விசைத்தறி உரிமையாளர்களே அதிகம் உள்ளனர். இவர்கள் மருத்துவத் துணி உற்பத்தியாளர்களிடமிருந்து நூலை பெற்று நெசவு செய்து கொடுக்கின்றனர். அதன்பின் அந்த துணி சைசிங் செய்யப்பட்டு மருத்துவ துணியாக மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டபோது நூல் 5% வரி அடுக்கிலும், நெசவு செய்த பேண்டேஜ் துணி 12% வரி அடுக்கிலும் இருந்ததால், ஜிஎஸ்டி ரிட்டர்ன் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல் நிலவியது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி சீரமைப்பில் வரி விதிப்பு இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டதால், பேண்டேஜ் துணி, நூல் ஆகிய இரண்டும் 5% வரி அடுக்கில் கொண்டு வரப்பட்டதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
நூல் தட்டுப்பாடு, மாசு கட்டுப்பாட்டு விதிகள், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பேண்டேஜ் உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது. மேலும் பேண்டேஜ் துணி ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டதால் சிறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழக அரசு மின் கட்டணத்தைக் குறைக்கவும், மத்திய அரசு பேண்டேஜ் ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகையை மீண்டும் வழங்கவும் நடவடிக்கை எடுத்தால் பேண்டேஜ் தொழில் புத்துணர்ச்சி பெறும். பேண்டேஜ் உற்பத்தியில் பல்வேறு படிநிலைகள் உள்ளதால் 3 இடங்களில் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து செலவு அதிகமாக உள்ளது.
இதைத் தவிர்க்கவும் அனைத்து உற்பத்தி படிநிலைகளையும் ஒரே இடத்தில் செய்ய ஏதுவாக, ராஜபாளையம் பகுதியில் மருத்துவத் துணி உற்பத்திக்கான தனி தொழில் பூங்கா அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.