புதுடெல்லி: உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தேவையான இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (எப்எஸ்எஸ்ஏஐ) பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் உரிமங்கள் இனி நிரந்தரமாகச் செல்லும் என்றும் அவற்றைப் புதுப்பிக்கத் தேவையில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக எப்எஸ்எஸ்ஏஐ கடந்த 13-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உணவுப் பாதுகாப்புத் தரத்தை வலுவாகப் பராமரிக்கும் அதே வேளையில், தொழில் செய்வதை எளிதாக்கும் நோக்கத்துடன் கூடிய முக்கிய ஒழுங்குமுறை மற்றும் நடைமுறைச் சீர்திருத்தங்களுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தொழில் துறையினருடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு இந்தச் சீர்திருத்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இவை நிதி ஆயோக் அமைத்த நிதி சாரா ஒழுங்கு முறை சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்கவும் அமைந்துள்ளன.
இதன்படி, உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் (எப்எஸ்எஸ்ஏஐ) வழங்கப்படும் பதிவுகள் மற்றும் உரிமங்கள் இனி வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். இதற்கு முன்பு, உணவு வணிக நிறுவனங்கள் தங்கள் பதிவுகளையும் உரிமங்களையும் அவ்வப்போது புதுப்பிக்க வேண்டியிருந்தது. புதிய முறையின் கீழ், புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
வருவாய் வரம்பு உயர்வு: மேலும் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான விற்றுவருவாய் வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1, 2026 முதல், ஆண்டு வருமானம் ரூ.1.5 கோடி வரை உள்ள நிறுவனங்களுக்கு அடிப்படைப் பதிவு மட்டுமே போது மானது (முன்பு ரூ.12 லட்சமாக இருந்தது). ரூ.50 கோடி வரை வருமானம் உள்ள நிறுவனங்கள் மாநில உரிமத்தின் கீழும், ரூ.50 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் மத்திய உரிமத்தின் கீழும் வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உணவு சார்ந்த தொழில்கள் செய்வதை எளிதாக்கும் வகையில் இந்த சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் உணவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் அல்லது வியாபாரிகள் அடிக்கடி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய சுமை குறையும். இதனால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத் தரங்களைப் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெருவோர வியாபாரிக்கு சலுகை: மற்றொரு முக்கிய சீர்திருத்தம், தெருவோர உணவு வியாபாரி களுக்கான இரட்டைப் பதிவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய விதிகளின்படி, தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு, தெருவோர வியாபார ஒழுங்குமுறை) சட்டம், 2014-ன் கீழ் மாநகராட்சிகள் அல்லது நகர விற்பனைக் குழுக்களிடம் ஏற்கெனவே பதிவு செய்துள்ள வியாபாரிகள், எப்எஸ்எஸ்ஏஐ-ல் தானாகவே பதிவு செய்யப்பட்டவர்களாகக் கருதப்படுவார்கள்.
தனியாக பதிவு செய்யத் தேவையில்லை. வெவ்வேறு அதிகாரிகளிடம் இருந்து பல பதிவுகளைப் பெற வேண்டிய அவசியம் நீக்கப்படுவதால் 10 லட்சத்துக்கும் அதிகமான தெருவோர உணவு வியாபாரிகள் பயனடைவார்கள்.