சென்னை: தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்கள் வேளாண் விளைபொருட்களுக்கான மதிப்பு கூட்டும் மையம் அமைக்க ரூ.1.50 கோடி வரை முதலீட்டு மானியம் வழங்கப்படும் என, அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு வேளாண் விளைபொருட்களின் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், ரூ.10 கோடி வரையிலான மதிப்புக் கூட்டுதல் திட்டங்களுக்கு பொது பிரிவினருக்கு முதலீட்டு மானியமாக 25 சதவீதமும், பெண்கள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட்டாரங்களில் தொடங்கப்படும் தொழில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குக் கூடுதலாக 10 சதவீதம் என மொத்தம் 35 சதவீதம் என, அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்கப்படும். இதுதவிர, அனைத்துப் பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம், 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இத்திட்டத்தில், தேர்ந்தெடுக்கப்படும் தொழில்கள் வேளாண்மை, தோட்டக்கலை விளை பொருட்களின் 2-ம் நிலை அல்லது 3-ம் நிலை பதப்படுத்தும் திட்டங்களாக இருக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்சம் 5 சதவீதமாக இருக்க வேண்டியது அவசியம். மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக பெறவேண்டும்.
வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் நவீன மற்றும் புதுமையான மதிப்பு கூட்டும் திட்டங்கள், ஏற்றுமதித் திறன் கொண்ட விளைபொருட்கள், விரைவில் வீணாகக்கூடிய காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களில் மதிப்பு கூட்டுதல், மாவட்டத்துக்கே உரிய தனித்துவமான வேளாண் விளைப்பொருட்களின் மதிப்பு கூட்டுதல் ஆகியவற்றில் ஆர்வமுடைய தொழில் முனைவோர்களை மாவட்டங்கள் தோறும் தேர்வு செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், பயன்பெற ஆர்வமுள்ள வேளாண் தொழில் முனைவோர்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, வங்கியில் கடன் ஒப்புதல் பெற வேண்டும். அதன் பின்னர், மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட தொழில்நுட்பக்குழு மற்றும் மாநில திட்ட ஒப்புதல் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு, தொழில் திட்டத்திற்கேற்ப மானியத் தொகை அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை ஒரே தவணையாக வழங்கப்படும். மேலும், 5 ஆண்டுக்கு 5 சதவீதம் வட்டி மானியத்துடன் கூடுதலாக வேளாண் கட்டமைப்பு நிதி திட்டத்தில் 3 சதவீத வட்டி மானியமும் பெறலாம்.
ஏற்கெனவே, மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களின் கீழ், வேளாண் விளைபொருட்கள் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில்களுக்கு நிதியுதவி பெற்ற பயனாளிகளும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். அவர்களுக்கு அதிகபட்ச மானியத் தொகையிலிருந்து ஏற்கெனவே வேறு ஏதாவது திட்டத்தில் பெற்று வரும் மானியத் தொகை போக மீதித் தொகை மானியமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.