வணிகம்

மத்திய கிழக்கு பதற்றம்: ரூ.6,000 கோடி மதிப்பிலான இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு

வெற்றி மயிலோன்

புது டெல்லி: மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக பாசுமதி அரிசி ஏற்றுமதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பல வளைகுடா நாடுகளுக்கான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அரிசி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 50% மேற்கு ஆசியாவுக்கு, அதாவது சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமனுக்கு செல்கிறது. தற்போதைய போர் பதற்றம் காரணமாக அரிசி வர்த்தகம் நீண்டகால உறுதியற்ற தன்மைக்கு உள்ளாகும். மேலும், பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் போக்குவரத்தை ஈரான் மூடியுள்ளது. இதனால் மேற்கு ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதி, இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

          

தானியங்கள் ஏற்றுமதியில் இந்தியா உலகின் முன்னணி நாடாக உள்ளது. 2024-2025-ஆம் ஆண்டில் இந்தியா கிட்டத்தட்ட ரூ.50,000 கோடி மதிப்புள்ள சுமார் ஆறு மில்லியன் டன் பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்தது. இதில் முதன்மையாக மேற்கு ஆசிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக பாசுமதி அரிசியின் மொத்த விலை ஏற்கனவே 10-15% உயர்ந்துள்ளது. பாசுமதி அரிசி ஏற்றுமதியில் ஈரான் ஒரு முக்கிய சந்தையாக இருப்பதால், வரும் நாட்களில் விலைகளில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் இந்திய மாநிலங்கள் ஆகும். இந்த இரண்டு மாநிலங்களும் பிரீமியம் நறுமண பாசுமதி அரிசி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 75% பங்களிக்கின்றன. இதில் ஹரியானாவின் பங்கு 35% ஆகவும், பஞ்சாப் பங்கு 40% ஆகவும் உள்ளது.

“போர் பதற்றம் காரணமாக தங்கள் சரக்குக் கப்பல்கள், அவை இருக்கும் இடத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கப்பல்களில் ஏற்றப்பட்ட பொருட்கள் மற்றும் தானியங்களின் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது. மோதல் நீடித்தால், ஏற்றுமதியாளர்களுக்கு இழப்புகள் அதிகரிக்கும். மேலும், இது பாசுமதி விலையில் வீழ்ச்சியை ஏற்படுத்துவதுடன், நறுமண தானியங்களை உற்பத்தி செய்பவர்களையும் பாதிக்கும்” என்று பஞ்சாபில் உள்ள பாசுமதி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ரஞ்சித் சிங் ஜோசன் கூறினார்.

ஈரான் மற்றும் ஈரானின் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் (APEDA) தரவுகளின்படி, 2025 ஏப்ரல்-டிசம்பர் மாதங்களுக்கு இடையில் மேற்கு ஆசிய நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி ரூ.27,197 கோடியாக இருந்தது. இதில் ஈரான் மட்டும் ரூ.6,000 கோடி மதிப்புள்ள பாசுமதி அரிசியை இறக்குமதி செய்தது.

SCROLL FOR NEXT