திருப்பூர்: வளைகுடா போர் காரணமாக திருப்பூர்,கோவை உள்ளிட்ட தொழில்துறை ஆரம்ப கட்டபாதிப்பை சந்திக்க தொடங்கி உள்ளன. திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியில் முக்கிய பங்காற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்களின் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்த சாய ஆலை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
திருப்பூர் சாய ஆலை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து,ஈரான் மீது போர்த் தொடுத்துள்ளது.
இதன் காரணமாக இயற்கை எரிவாயு, நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் உள்ளிட்டவை சாய ஆலைகளுக்கு தேவையான அளவு இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் சாயம், ரசாயனங்கள், நிலக்கரி மற்றும் எரிவாயு விலைகளும் உடனடியாக அதிகரித்துள்ளது. இதனால் சாய ஆலைகளின் உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது.
இச்சூழலில் சாயக்கட்டணத்தை செலுத்துவோருக்கு மட்டும் ஜாப்ஒர்க் செய்து கொடுக்க வேண்டிய சூழலுக்கு சாய ஆலைகள் தள்ளப்பட்டுள்ளன. ஆகவே, ‘ஜாப் ஒர்க்’ கட்டணத்தை குறைந்தது 20 சதவீதம் அதிகரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் சாய ஆலைகள் உள்ளன.
ஏற்றுமதியாளர்களும், இதர பின்னலாடை உற்பத்தியாளர்களும் உயர்த்தப்பட்டுள்ள ‘ஜாப் ஒர்க்’ கட்டணத்தை செலுத்தி தங்களுக்கு தேவையான சேவைகளை ஆலைகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.