புதுடெல்லி: இண்டிகோ விமான சேவையில் கடந்த 5 நாட்களாக ஏற்பட்ட முடக்கம் நேற்று முதல் சீராகி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானிகள் பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களால் நாட்டின் மிகப்பெரிய இண்டிகோ விமான நிறுவன சேவை கடந்த 5 நாட்களாக கடுமையாக பாதித்தது. இத னால் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில் விமான சேவைகளை சீர்ப்படுத்தும் பணியில் இண்டிகோ நிறுவனம் நேற்று தீவிரமாக இறங்கியது. நேற்று 1,500 விமான சேவைகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 95 சதவீத நெட்வொர்க் இணைப்பு நேற்று மீண்டும் ஏற்படுத்தப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்தது.
இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் நேற்று காலை கூட்டம் குறைவாக இருந்தது. ஜம்மு, அமிர்தசரஸ், அகமதாபாத், நாக்பூர் போன்ற இடங்களுக்கான விமான சேவைகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டன. மும்பையில் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
நேற்று 1,500 விமான சேவைகளை வழங்கியதாகவும், 95 சதவீத நெட்வொர்க் மீண்டும் ஏற்படுத்தப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்தது. இதனால் விமான சேவையில் ஏற்பட்ட முடக்கம் நேற்று முதல் சீராக தொடங்கியது.
சிஇஓ விளக்கம்: இண்டிகோ விமான நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பீட்டர் எல்பர்ஸ் தனது ஊழியர்களுக்கு நேற்று வெளியிட்ட வீடியோவில், “விமான சேவை படிப்படியாக சீரடைந்து வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 1,650 ஆக அதிகரிக்கும். 75 சதவீத விமானங்கள் சரியான நேரத்துக்கு இயக்கப்படுகின்றன. விமான சேவை ரத்து செய்யப்பட்டால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது. எனவே, ரத்து செய்யப்படும் விமானங்களுக்கு முன்பதிவு செய்தவர்கள் விமான நிலையத்துக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.
இதுவரை ரூ.610 கோடி ரீபண்ட்: இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்குள் கட்டணத்தை பயணிகளிடம் திருப்பித் தர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு 8 மணி நிலவரப்படி ரூ.610 கோடியை அந்நிறுவனம் திருப்பி அளித்திருப்பதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் பயணிகளின் 3 ஆயிரம் உடமைகளையும் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.