டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சலாஹுதீன் அப்துல்-காஃபி (35). இவர் மைக்ரோசாப்ட், கூகுள், யூடியூப் மற்றும் குரூஸ் போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் 14 ஆண்டுகள் பணியாற்றியவர். அங்கு இவருக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.4.25 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது.
தொழில்நுட்பத் துறை என்பது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை விட, வெறும் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்குவதாக உணர்ந்த அப்துல்-காஃபி, விரக்தியில் வேலையை விட்டு விட்டார். சான் பிரான்சிஸ்கோவிலிருந்து வெளியேறிய அவர், தனது வருமானத்தில் 50 சதவீதத்திற்கும் மேலாகக் குறைத்துக் கொண்டு, ஒரு மதச்சார்பற்ற லாப நோக்கற்ற அமைப்பில் இணைந்தார். அந்தப் பணியுடன் சேர்த்து, பகுதி நேரமாகத் தனது நண்பர்களுக்கு 'பார்பெக்யூ' முறையில் உணவு சமைத்து விருந்தளிக்கத் தொடங்கினார். இவரது தனித்துவமான சமையல் முறை நண்பர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இது குறித்து அப்துல்-காஃபி கூறியதாவது: கடந்த டிசம்பர் 2024-ல் ‘காஃபி பிபிக்யூ' என்ற ஹலால் உணவகத்தைத் தொடங்கினேன். முதல் முறை என்பதால் 3 நாட்களுக்குத் தேவையான உணவைத் தயாரித்து வைத்திருந்தோம். ஆனால், திறந்த முதல் நாளிலேயே அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அன்றே இரவோடு இரவாக மீண்டும் சமைக்கத் தொடங்கினோம். இவ்வாறு அப்துல்-காஃபி கூறினார்.
குறுகிய காலத்திலேயே காஃபி பிபிக்யூ உணவகம் டெக்சாஸ் மாகாணம் மட்டுமின்றி, அமெரிக்கா முழுவதும் பிரபலமானது. கடந்தாண்டு மட்டும் இந்த உணவகம் மூலம் சுமார் ரூ.21.7 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இந்த வருவாய் ரூ.37.8 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
எனினும், உணவகத்தைத் தொடங்க வாங்கிய முதலீட்டுத் தொகையான 1 மில்லியன் டாலர் கடனை இன்னும் முழுமையாக அடைக்காததால், உணவகம் லாபத்தில் இயங்கினாலும், தான் இன்னும் ஒரு ரூபாய் கூட சம்பளமாக எடுத்துக்கொள்ளாமல், தனது பழைய சேமிப்புப் பணத்தைக் கொண்டே வாழ்க்கையை நடத்தி வருவதாக அப்துல்-காஃபி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.