புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் முதன்முறையாக 96-ஐ கடந்து வீழ்ச்சியடைந்தது.
ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள முடக்கம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில வாரங்களாகவே கடுமையான அழுத்தத்தில் உள்ளது. தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 110 அமெரிக்க டாலருக்கு அருகிலேயே நீடிக்கிறது. இதனால் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பதோடு, நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்தின் மீதும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கு அதிகமானவற்றை இறக்குமதி செய்வதால், உலகளாவிய எண்ணெய் விலை உயர்வானது இந்திய ரூபாயின் மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் அமெரிக்க டாலரில் வாங்கப்படுவதால், ரூபாயின் மதிப்பு பலவீனமடையும் போது இறக்குமதிச் செலவு மேலும் அதிகரிக்கிறது.
இது பணவீக்கம், எரிபொருள் கட்டணங்கள் மற்றும் ஒட்டு மொத்தப் பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து 96.14 ஆக நேற்று குறைந்தது. இது இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்ட வீழ்ச்சியாகும்.