புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.4% வளரும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. வரும் பிப்ரவரி 1ம் தேதி வரும் 2026- 27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வு செய்வதற்காக, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்வது வழக்கம்.
இது பொருளாதாரத்தின் குறுகிய கால மற்றும் நடுத்தர கால வாய்ப்புகள் குறித்த கண்ணோட்டத்தை வழங்கும். அந்த வகையில், 2025- 26 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு, தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் பதற்றம், வர்த்தகப் போர் உள்ளிட்ட காரணங்களால் உலகளாவிய சூழல் தொடர்ந்து பலவீனமாகவே உள்ளது. இத்தகைய பின்னணியில், இந்தியாவின் செயல்பாடு தனித்து நிற்கிறது. நடப்பு 2025- 26 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இதுபோல 2026- 27 நிதியாண்டில் ஜிடிபி 6.8 முதல் 7.2% வளரும் என கணிக்கப்பட்டுள்ளது.
விநியோகத்தைப் பொறுத்தவரை, சேவைத் துறை வளர்ச்சியின் முக்கிய உந்து சக்தியாக நீடிக்கிறது. இத்துறை 9.1% வளர்ச்சியை எட்டும். மத்திய அரசின் வருவாய் ஜிடிபியில் 9.2 சதவீதமாக வலுவடைந்துள்ளது. நேரடி வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2025 நிதியாண்டில் 9.2 கோடியாக அதிகரித்துள்ளது. 2025 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.17.4 லட்சம் கோடியாக இருந்தது.
இது முந்தைய ஆண்டைவிட 6.7% அதிகம். மத்திய அரசின் மூலதன செலவினம் 2025 நிதியாண்டில் ஜிடிபியில் 4 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிக அளவிலான பொது முதலீடுகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தபோதிலும், இந்தியா தனது கடன்-ஜிடிபி விகிதத்தை 2020-லிருந்து சுமார் 7.1 சதவீதம் வரை குறைத்துள்ளது.
வங்கித் துறை செயல்பாடுகள்: நாட்டின் பணவியல் மற்றும் நிதியியல் துறை 2026 நிதியாண்டில் வலுவான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது. வணிக வங்கிகளின் சொத்து தரம் முன்னேறி உள்ளது. 2025 செப்டம்பர் நிலவரப்படி, மொத்த வாராக் கடன் விகிதம் 2.2% ஆகவும் நிகர வாராக் கடன் விகிதம் 0.5% ஆகவும் குறைந்துள்ளது. 2025 டிசம்பர் நிலவரப்படி, வங்கிகளின் மொத்த கடன் வளர்ச்சி முந்தைய ஆண்டைவிட 14.5% அதிகரித்துள்ளது. இது 2024-ல் 11.2% ஆக இருந்தது.
பிரதம மந்திரி ஜன் தன் திட்டத்தின் கீழ் 2025 மார்ச் வரை 55.02 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. குறு, சிறு நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் முத்ரா திட்டத்தின் கீழ் 55.45 கோடி பேருக்கு ரூ.36.18 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
2026 நிதியாண்டில் (9 மாதங்களில்) 2.35 கோடி புதிய டிமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்த டிமேட் கணக்கு எண்ணிக்கை 21.6 கோடியைத் தாண்டி உள்ளது. பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 5.9 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 3.5 கோடி பேர் 2-ம் கட்ட நகரங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சர்வதேச மதிப்பீடு: நாட்டின் ஒழுங்குமுறை தரம் முறையாக உயர்ந்து வருவது சர்வதேச அளவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2025-ல் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை இணைந்து நடத்திய நிதித் துறை மதிப்பீட்டு திட்டத்தின் மூலம் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
வேளாண்மை துறை: சிறந்த பருவமழை காரணமாக, 2024-25 வேளாண் ஆண்டில் நாட்டின் உணவு தானிய உற்பத்தி 3,577.3 லட்சம் மெட்ரிக் டன்னை எட்டியது. இது முந்தைய ஆண்டைவிட 254.3 லட்சம் டன் அதிகம். பிஎம் கிஸான் திட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை விவசாயிகளுக்கு ரூ.4.09 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
14 துறைகளில் செயல்படுத்தப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டம் மூலம் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதுடன், 12.6 லட்சம் வேலை வாய்ப்பு உருவாகி உள்ளது.
சூரிய சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இந்தியா உலகளவில் 3-வது இடத்தில் உள்ளது. நிதி ஆயோக் கணக்கீட்டின்படி, பன்முக வறுமைக் குறியீடு 55.3%-லிருந்து (2005-06) 11.28%-ஆக (2022-23) குறைந்துள்ளது.
இணையத்துக்கு கட்டுப்பாடு: குழந்தைகளின் டிஜிட்டல் பழக்கவழக்கங்களை வடிவமைப்பதிலும், அவர்கள் இணையதளங்களில் உள்ள தீய உள்ளடக்கங்களைக் காண்பதைத் தவிர்க்க எளிய சாதனங்கள் மூலம் கல்வி கற்பதை ஊக்குவிப்பதிலும் பள்ளிகள் முக்கிய பங்காற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: 2005 முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலத்தில், உலகளாவிய சரக்கு ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 1-லிருந்து 1.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேநேரம், சேவை ஏற்றுமதி 2-லிருந்து 4.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2025 நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி 825.3 பில்லியன் டாலரை எட்டியது.
இது முந்தைய ஆண்டை விட 6.1% அதிகம். சேவை துறை ஏற்றுமதி 13.6% வளர்ச்சியை பெற்று 387.6 பில்லியன் டாலரை எட்டி உள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை 2026 நிதியாண்டின் காலாண்டில் ஜிடிபியில் 1.3% ஆக இருந்தது. இது மற்ற பெரிய பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடும்போது மிதமானது ஆகும்.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய்நாட்டுக்கு அதிக பணம் அனுப்பும் நாடாக இந்தியா நீடிக்கிறது. 2025 நிதியாண்டில் இது 135.4 பில்லியன் டாலரை எட்டியது.
2026 ஜனவரி 16 நிலவரப்படி, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 701.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதன்மூலம் 11 மாதங்களுக்கான இறக்குமதி செலவை சமாளிக்க முடியும். உலகளாவிய முதலீட்டுச் சூழல் மந்தமாக இருந்த போதிலும், 2025 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 64.7 பில்லியன் டாலர் முதலீட்டை இந்தியா ஈர்த்துள்ளது.
அமெரிக்காவுடன் ஒப்பந்தம்: கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் 50% வர்த்தக வரி விதித்துள்ளது. இது ஏற்றுமதியை பாதித்துள்ளது. இதையடுத்து அமெரிக்காவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுவரை 6 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த ஆண்டுக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வெளிநாட்டு வர்த்தக ரீதியான நிச்சயமற்ற தன்மையைக் குறைக்க உதவும்.