புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரி விதித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் டெல்லியில் நேற்று நடைபெற்ற தனியார் ஊடக நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
இந்திய தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள், நடுத்தர வர்க்க மக்களின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இருதரப்பு இடையிலான கருத்து வேறுபாடுகளை களைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா, அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பிருக்கிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்திய வருகை ஆக்கப்பூர்வமாக அமைந்தது. சீனா, ஐரோப்பிய நாடுகள் உடனான ரஷ்ய அரசின் உறவில் பல்வேறு ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. ஆனால் கடந்த 78 ஆண்டுகளாக இந்தியா, ரஷ்யா இடையிலான நட்புறவு வலுவாக நீடித்து நிலைத்திருக்கிறது. ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா நட்புறவை பேணி வருகிறது. இந்திய வெளியுறவு கொள்கை, சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது. இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ரஷ்ய பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாக்சிம் கூறும்போது, ‘‘இந்தியாவுக்கு ஓராண்டில் 58 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ரஷ்யா ஏற்றுமதி செய்கிறது. அதேநேரம் ரஷ்யாவுக்கு 5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மட்டுமே இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இந்த வர்த்தகப் பற்றாக்குறையை ஈடு செய்ய இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது’’ என்றார்.