புதுடெல்லி: இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே ஏற்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) உள்நாட்டில் பல்வேறு துறைகளுக்கு அதிக பலனளிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியத் தொழில் கூட்டமைப் பின் ஏற்றுமதிக்கான தேசியக் குழுத் தலைவரும், பேட்டன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான சஞ்சய் புதியா கூறுகையில்,” இந்திய – ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் சந்தை அணுகல், வர்த்தகப் போட்டியை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் பல்வேறு வர்த்தகப் பொருட்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலான சந்தை அணுகல் கிடைக்கும். இது நமது உள்நாட்டு நிறுவனங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்” என்றார். டெலாய்ட் இந்தியா நிறுவனத்தின் பார்ட்னர் சவுரப் காஞ்சன்
கூறுகையில், “இந்த ஒப்பந்தம் இந்தியாவின் முந்தைய வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. குறிப்பாக, இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரியை இந்தியா 110-லிருந்து 10 சதவீதமாகப் படிப்படியாகக் குறைக்க சம்மதித்துள்ளது.
இந்தியாவின் கார் சந்தை ஆண்டுக்கு 43 லட்சம் யூனிட்களுக்கும் அதிகமாக வளர்ந்து வருவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்களால் இந்த வரிச் சலுகையைச் சமாளிக்க முடியும்” என்றார். டெலாய்ட் இந்தியாவின் மற்றொரு பார்ட்னரான நிவாஸ் குச்சி போட்லா கூறுகையில், “தற்போது இருதரப்பு வர்த்தகம் 136 பில்லியன் டாலராக உள்ளது.
இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும்போது, இரு தரப்பினருக்கும் மிகப்பெரிய அளவிலான வர்த்தக வாய்ப்புகள் அமையும். விவசாயப் பொருட்கள் ஏற்றுமதியில் உள்ள வரி தடைகள் இதன் மூலம் நீங்கும்” என்றார். ஷர்துல் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனத்தின் பார்ட்னர் ருத்ர குமார் பாண்டே கூறுகையில், “தற்போது சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகள் வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்கின்றன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அந்த வாய்ப்புகள் இனி இந்தியாவை நோக்கித் திரும்பும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
எப்டிஏ ஒப்பந்தம், இந்தியாவின் வாகன உதிரிபாகங்கள் துறையில் நேரடி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும், சர்வதேச விநியோகச் சங்கிலியில் இந்தியாவை இணைப்பதன் மூலமும், நாட்டின் ஆட்டோமொபைல் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.