சென்னை: சிறிய ஆறுதலுக்குப் பின்னர் பழையபடி மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது தங்கம், வெள்ளி விலை. நேற்று (பிப்.3) வர்த்தக முடிவின்போது ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,560 உயர்ந்து அதிர்ச்சி தந்த தங்கம் விலை, இன்று (பிப்.4) காலையிலேயே பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில், கடந்த ஜன.30, 31 தேதிகளிலும், பிப்.2-ம் தேதியும் தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கி வாடிக்கையாளர்களை ஆசுவாசப்படுத்தியது. மூன்று நாட்களில் பவுனுக்கு ரூ.22,800 வரை குறைந்தது. புவி அரசியலில் மாற்றம், ஃபெடரல் வங்கித் தலைவரை ட்ரம்ப் தேர்வு செய்தது, முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று லாபம் பார்த்தது எனப் பல காரணங்கள் அதன் பின்னணியில் இருந்தன.
இந்த விலை குறைப்பு நீடிக்காதா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை மொத்தமாக பவுனுக்கு ரூ.2,560 அதிகரித்தது.
இந்நிலையில், இன்று (பிப்.4) காலை, தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்வு: வெள்ளி விலை நேற்று மதியம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று மேலும் ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.320-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.3,20,000-க்கும் விற்பனையாகிறது.