சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரிய உயர்வைச் சந்தித்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், டிச.15-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு, தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் இன்று சென்னையில், ஒரே நாளில் ஆபரணத் தங்கம் சவரனுக்குச் சுமார் ரூ.9,520 உயர்ந்துள்ளது. இந்தத் திடீர் உயர்வால், ஒரு சவரன் தங்கம் ரூ.1,34,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.16,800 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.14,720 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.425 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.25,000 உயர்ந்து, ரூ.4 லட்சத்து 25 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வால், குடும்ப நிகழ்ச்சிக்காக நகை வாங்க எண்ணியிருந்த மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விலை உயர்வு குறித்து, தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “ஈரானில் உள்நாட்டு கலவரம், அந்நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்ற போர் அச்சம், சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சி போன்றவற்றால் பெரும் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. தவிர, தங்கத்தின் சப்ளை குறைந்து தேவை அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தனர்.