சென்னை: தங்கத்தின் விலை இன்று (டிச.22) ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, ஒரு பவுன் மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை கடந்துள்ளது. இன்று மாலை வர்த்தக நேரத்தின்படி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.1,00,560 ஆக விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் தொடர் சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இந்நிலையில், இன்று காலை (டிச.22), 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480-க்கும், பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு பவுன் ரூ.99,840-க்கும் விற்பனையானது. இதனையொட்டி, மீண்டும் மதியம் தங்கத்தின் விலை பவுனுக்கு 710 ரூபாய் அதிகரித்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,360 அதிகரித்து ரூ.1,00,560 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, ஒரு கிராம் ரூ.12,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மதியம் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.231-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.