புதுடெல்லி: அணுசக்தி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதே தனது எதிர்கால கனவு என்று அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கவுதம் அதானி பேசியதாவது: நாட்டின் ஆற்றல் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் இறையாண்மை ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள புதிய உலகிற்கு ஏற்ப அதானி குழுமம் தன்னைத் தயார்படுத்தி வருகிறது.
கடந்த நிதியாண்டில் கடுமையான சோதனைகளையும், தீவிரக் கண்காணிப்புகளையும் எதிர்கொண்ட போதிலும், நிறுவனத்தின் அஸ்திவாரம் வலுவாக உள்ளது. அதானி குழுமம் அணுசக்தித் துறையில் அதிகாரப்பூர்வமாகக் கால்பதித்துள்ளது. இதற்காக ‘அதானி அட்டாமிக் எனர்ஜி' என்ற புதிய நிறுவனம் தொடங்கப்பட்டு, அதற்கான நிலங்களும் கண்டறியப்பட்டுள்ளன. வரும் 2035-ம் ஆண்டிற்குள் 10 கிகாவாட் அணுசக்தித் திறனை எட்டுவதை அதானி குழுமம் இலக்காகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில் துறைத் தேவைகள் மற்றும் தரவு மையங்களின் அதிவேக விரிவாக்கத்திற்குத் தேவையான தூய்மையான ஆற்றலை வழங்க இந்த உத்திசார் முடிவு உதவும். உள்கட்டமைப்பு ஒரு நாட்டிற்கு வலிமையைத் தருகிறது; செயற்கை நுண்ணறிவு அந்த நாட்டிற்குப் பேரதிகாரத்தைத் தருகிறது. எனவே இவ்விரண்டு துறைகளும் இனி தனித்தனி அல்ல.
விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்ட தரவு மையத் திட்டத்தை அமைப்பதற்காக ‘கூகுள்' நிறுவனத்துடன் அதானி குழுமம் இறுதி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் 3 கிகாவாட் திறன் கொண்ட தரவு மைய கட்டமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் மட்டும் உள்கட்டமைப்புத் துறையில் ரூ.1.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக அதானி குழுமம் முதலீடு செய்துள்ளது. இது நடப்பாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த தனியார் துறை மூலதனச் செலவினத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதானி பேசினார்.