புதுடெல்லி: அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போர் 10 நாட்களுக்கு மேலாக நீடிக்கிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது. இதனால் திரவ பெட்ரோலியம் எரிவாயு (எல்பிஜி) விநியோகம் பாதிக்கப்பட்டு இந்தியாவில் வர்த்தக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் லட்சக்கணக்கான ஓட்டல்கள் உட்பட 33 கோடி வீடுகளில் எல்பிஜி எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 31.3 மில்லியன் டன் எரிவாயு உபயோகப்படுத்தப்படுகிறது.
ஈரான் போர் காரணமாக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் உள்ள ஓட்டல்கள் பழைய விறகு அடுப்பு முறைக்கு மாறிவருகின்றன. அதேபோல் ஓட்டலில் விற்கப்படும் உணவு வகைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அதிக எரிபொருள் தேவைப்படும் ஃபாஸ்ட் புட் உணவுகள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வழக்கமாக இட்லி, தோசை, வடை, பொங்கல், கிச்சடி, பூரி போன்ற உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது அங்கு டீ மற்றும் காபி மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. மும்பை மற்றும் கொல்கத்தாவில் 20 சதவீத ஓட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
வர்த்தக சிலிண்டர்கள் கிடைக்காததால், கள்ளச் சந்தையில் காஸ் சிலிண்டர்கள் மிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதன் காரணமாக மீண்டும் பழங்கால விறகு அடுப்பு முறைக்கு மாறுவதாக ஓட்டல் உரிமையாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
ஓட்டல்களில் உணவு விநியோகம் அத்தியாவசிய சேவை என்பதால், காஸ் விநியோகத்தை மத்திய அரசு சீர்படுத்த வேண்டும் என ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளச் சந்தையில் காஸ் சிலிண்டர் விற்பனையை தடுக்க, காஸ் சிலிண்டருக்கான காத்திருப்பு காலம் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.