ஓசூரில் உள்ள உணவகம் ஒன்று வெளியிட்டுள்ள, ‘வர்த்தக சிலிண்டர் வழங்கினால் தினசரி இலவச பிரியாணி’ சலுகை அறிவிப்பு தொடர்பான சுவரொட்டி.
ஓசூர்: வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு உள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் சேவையிலும், தொழிலாளர்கள் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில் ஓசூரில் உள்ள உணவகம் ஒன்றில் ஒரு வர்த்தக சிலிண்டர் வழங்கினால் ஒரு மாதம் தினசரி சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என்ற சலுகையை அறிவித்துள்ளனர்.
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஓட்டல்களில் தினசரி தயாரிக்கப்படும் உணவு வகைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. சில ஒட்டல்களில் உணவு வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சில இடங்களில் ஓட்டல்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் வாடிக்கையாளர் நலனைக் கருத்தில் கொண்டு விறகு அடுப்பின் பயன்பாட்டை அதிகரித்துள்ளனர். இந்நிலையில், ஓசூர் தளி சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் புதிய சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘ஒரு வர்த்தக சிலிண்டர் வழங்கினால், ஒரு மாதத்திற்கு தினசரி ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும்; இரண்டு சிலிண்டர்கள் வழங்கினால், ஒரு மாதத்திற்கு தினசரி இரண்டு சிக்கன் பிரியாணி வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை உணவகம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுதொடர்பாக அந்த உணவக உரிமையாளர் கூறியதாவது: எங்களது உணவகத்தை நம்பி தினசரி 500 முதல் 1,000 வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக எங்கள் உணவகத்தில் விறகு அடுப்பு பயன்பாடு இருந்தாலும், விரைவான சமையலுக்கு சிலிண்டர் தேவையும் உள்ளது.
மேலும், தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கக் கூடாது, வாடிக்கையாளர்களின் சேவையில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற பொது நலத்துடனும், எங்களுக்கு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்ற அடிப்படையில் உதயமானது தான் இந்த புதிய சலுகை அறிவிப்பு.
இதற்குப் பலனாக 2 பேர் சிலிண்டர் வழங்கி எங்களது சலுகையைப் பெற்றுள்ளனர். வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு தீரும் வரை இந்த சலுகை தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.