சென்னை: பெசன்ட் நகர் கடற்கரையில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் உணவுத் திருவிழாவை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உணவுத் திருவிழா, சென்னை பெசன்ட் நகரில் இன்று தொடங்கியது. டிச.24-ம் தேதி வரை நடைபெறும் இந்த உணவு சங்கமத்தில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு மாவட்டங்களின் பாரம்பரிய உணவு வகைகள், திண்பண்டங்கள், பலகாரங்கள் என 235 வகை உணவுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
உணவுத் திருவிழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அங்குள்ள அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வித்தியாசமான உணவுகளை உண்டு ரசித்தார்.
இந்நிகழ்வில், மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனா, வேளச்சேரி எம்எல்ஏ ஹசன் மவுலானா, வாழ்ந்து காட்டுவோம் திட்ட முதன்மை இயக்க அலுவலர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய அம்சங்கள்: இந்த உணவுத் திருவிழாவில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த பாரம்பரிய சுவைமிக்க உணவுகளான ஆம்பூர் மற்றும் திண்டுக்கல் பிரியாணி, கொங்கு மட்டன் பிரியாணி, விருதுநகர் புரோட்டா, கடலூர் மீன் புட்டு, கருவாடு சூப், அரியலூர் தோசை, மயிலாடுதுறை இறால் வடை, சேலம் தட்டு வடை, காஞ்சிபுரம் கோயில் இட்லி, நீலகிரி ராகி களி, தூத்துக்குடியின் யாழ் உணவுகள் உள்ளிட்ட 235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெறுகின்றன. இதற்காக 38 பிரத்யேக உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர அடுப்பில்லா முறையில் தயாரித்த உணவுகள், பனை பொருட்கள், 90-ம் ஆண்டு காலகட்ட நினைவுகளைத் தூண்டும் தின்பண்ட வகைகள், செட்டிநாடு பலகாரங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய ஏதுவாக 12 சிறப்பு அரங்ககுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 24-ம் தேதி வரை மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரையும் உணவுத் திருவிழா நடைபெறும்.
கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு: இந்நிகழ்வில் உணவு விற்பனை மட்டுமின்றி, மாலை நேரங்களில் பொதுமக்களைக் கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மகளிர் குழுவினருக்கு விற்பனை நுணுக்கங்கள் மற்றும் சுகாதாரம் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.