மாதிரி படம்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் மணலூர், காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கத்தில் ரூ.1,012 கோடி மதிப்பீட்டில் மின்னணு பொருட்கள் உற்பத்தி மையங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மின்னணு சாதனங்கள் உற்பத்தி துறையில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, மின்னணு சாதனங்கள் மற்றும் செமிகண்டக்டர் தொடர்பான தொழில்களை மேலும் விரிவுபடுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மணலூர், காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கத்தில் ரூ.1,012 கோடி மதிப்பீட்டில் மின்னணு பொருட்கள் உற்பத்தி மையங்கள் ( Electronics Manufacturing Clusters_EMC) அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, மணலூரில் ரூ.587.47 கோடி மதிப்பீட்டில் 474.3 ஏக்கர் பரப்பிலும், பிள்ளைப்பாக்கத்தில் ரூ.424.55 கோடி செலவில் 379.3 ஏக்கர் பரப்பிலும் மின்னணு பொருட்கள் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
நாட்டின் மின்னணு பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்த மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக, இந்தியாவில் மின்னணு பொருட்களின் உற்பத்தி 7 மடங்கும், அவற்றின் ஏற்றுமதி 11 மடங்கும் அதிகரித்துள்ளன. நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் மொத்த செல்போன்களில் 99.2 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மணலூர் மற்றும் பிள்ளைப்பாக்கத்தில் அமைக்கப்பட உள்ள மின்னணு பொருட்கள் உற்பத்தி மையங்கள் மூலம் தமிழகத்தில் மின்னணு உற்பத்தி திறன் மேலும் அதிகரிக்கும். புதிய தொழிற்சாலைகள் வருவதால் அப்பகுதியில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
புதிய தொழிற்சாலைகள், மின்னணு உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள், சப்ளை செயின் நிறுவனங்கள் மற்றும் துணைத் தொழில்கள் அதிக அளவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது