புதுடெல்லி: வரும் 2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதில் நகர பொருளாதார பிராந்தியம் என்ற சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி நாடு முழுவதும் 7 இடங்களில் நகர பொருளாதார பிராந்தியங்கள் (சிஇஆர்) அமைக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் கோவை- ஈரோடு- திருப்பூர் ஆகிய 3 நகரங்களை உள்ளடக்கிய நகர பொருளாதார பிராந்தியம் உருவாக்கப்பட உள்ளது. இதேபோல ஒடிசாவில் புவனேஸ்வர்- புரி - கட்டாக் ஆகிய 3 நகரங்களை உள்ளடக்கிய சிஇஆர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இவை தவிர கர்நாடக தலைநகர் பெங்களூரு, ஆந்திராவின் விசாகப்பட்டினம், மகாராஷ்டிராவின் புனே, குஜராத்தின் சூரத், உத்தர பிரதேசத்தின் வாராணசி ஆகிய நகரங்களிலும் நகர பொருளாதார பிராந்தியம் உருவாக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறியதாவது: நாடு முழுவதும் 7 இடங்களில் சிஇஆர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அந்த பிராந்தியங்களில் தொழில் வளர்ச்சி மேம்படும். புதிதாக குறு, சிறு ஆலைகள் உருவாக்கப்படும்.
மிக நீண்ட கால அடிப்படையில் தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். வளர்ச்சி, புதுமை கண்டுபிடிப்புகள், புதிய வாய்ப்புகள் ஆகிய 3 இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு சிஇஆர் திட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: நகர பொருளாதார பிராந்தியம் திட்டத்தின் (சிஇஆர்) கீழ் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா, குஜராத், உத்தர பிரதேச மாநிலங்களின் நகரங்களில் மிகப்பெரிய தொழில் புரட்சி ஏற்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு சிஇஆர் பிராந்தியத்திலும் தலா ரூ.5,000 கோடி முதலீடு செய்யப்படும். இந்த திட்டத்தால் தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களும் அபார வளர்ச்சி அடையும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.