ஏராகம் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிழல் வலை நாற்றங்கால் | விவசாயி சாமிநாதன்
கும்பகோணம் வட்டம் ஏராகரத்தில் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் அதிகரித்துள்ள செலவை சமாளிக்கும் நோக்கில், முதன்முறையாக நிழல் வலை நாற்றங்கால் முறையில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கும்பகோணம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வாழை, கரும்பு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டாலும், பிரதானமாக நெல் சாகுபடியையே பெரும்பாலான விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக் காலங்களில் கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, நீர் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் விவசாய பணிகள் சிரமமாகி வருகின்றன. பல தொழிலாளர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் மாற்று வேலைகளுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளதால், விவசாயத்துக்கு ஆட்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இதனால், விவசாயிகள் நடவு மற்றும் அறுவடைக்கு இயந்திரங்களை பயன்படுத்தி வந்தாலும், அதற்கும் தொழிலாளர் தேவை இருப்பதால் சிரமம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், ஏராகரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சாமிநாதன், பச்சை நிறத்தாலான நிழல் வலை நாற்றங்கால் அமைத்து நெல் சாகுபடி செய்யும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: விவசாய தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கூலி உயர்வு காரணமாக விவசாய செலவுகள் அதிகரித்து வருகின்றன. இதற்கான மாற்றாக நிழல் வலை நாற்றங்கால் முறையை பயன்படுத்தி வருகிறேன்.
ஏக்கருக்கு 30 மீட்டர் நீளம், 1.5 மீட்டர் அகலத்தில் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பச்சை நிற நிழல் வலை வாங்கி, நாற்றங்காலை தயார் செய்த பின் அதன் மேல் விரித்து, மண் தூவி விதை தெளித்து மீண்டும் வலை மூலம் மூடப்படுகிறது.
7 நாட்களில் முளைத்து, 17 நாட்களில் நாற்றுகளை எடுத்து நடவு செய்யலாம். இந்த முறையில், நாற்றுகளை வேருடன் எளிதாக எடுக்க முடிவதால் நாற்று பறிப்பதற்கான தொழிலாளர் தேவை இல்லை. இதனால் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வரை செலவு மிச்சமாகிறது.
மேலும், குறைந்த அளவு நீர் போதுமானதாக இருப்பதுடன், நாற்றுகள் வலுவாக வளர்ந்து முளைப்புத்திறன் அதிகரிப்பதால் விளைச்சலும் கூடுகிறது. மழை பெய்தாலும் விதைகள் நீரில் செல்லாமல் பாதுகாக்கப்படுகின்றன.
பொதுவாக ஏக்கருக்கு 20 கிலோ முதல் 30 கிலோ விதை தேவைப்படும் நிலையில், இந்த முறையில் 5 கிலோ விதை போதுமானது. இதனால், விதை செலவு, தொழிலாளர் செலவு, பராமரிப்பு செலவு உள்ளிட்டவற்றில் மொத்தமாக ரூ.7 ஆயிரம் வரை மிச்சமாகும். குறைந்த செலவில் அதிக லாபம் தரும் இந்த முறையை மற்ற விவசாயிகளும் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.