புதுடெல்லி: சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டரின் எடையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவின. இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா நேற்று கூறியதாவது: வீட்டு உபயோக சிலிண்டரின் எடை 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாக குறைக்கப்படுவதாக பரவும் தகவலில் உண்மையில்லை.
இறக்குமதி பாதிப்பால் தட்டுப்பாடு நிலவினாலும், எடையைக் குறைக்கும் திட்டம் எதுவும் எண்ணெய் நிறுவனங்களிடம் இல்லை. சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் எடை குறைப்பு குறித்து பரவி வரும் தகவல்கள் அனைத்தும் வெறும் யூகங்கள் மட்டுமே. எனவே, பொதுமக்கள் இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.