புதுடெல்லி: யுபிஐ மூலம் ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்டணம் (எம்டிஆர் - வணிகர் தள்ளுபடி வீதம் ) விதிக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதாவில் வங்கிகளும் சேவை நிறுவனங்களும் மின்னணு பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதற்கான தடையை நீக்க முன்மொழிந்துள்ளார். இதையடுத்து, ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்டணம் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அரசு புள்ளிவிவரங்களின்படி, மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளின் பங்கு 5% மட்டுமே. ஆனாலும், இவை மொத்த பரிவர்த்தனை மதிப்பில் 65% பங்கைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கிரெடிட் கார்டுகளைப் போல் அல்லாமல், இதில் நிதி மூலதனச் செலவு இல்லாததால், வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு ஒரு குறிப்பிட்ட உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, ரூ.2,000-க்கு உட்பட்ட பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் இல்லை. இதனால் காய்கறி, பால், மளிகைப் பொருட்கள் வாங்குவது மற்றும் ஆட்டோ, டாக்சி கட்டணம் செலுத்துவது போன்ற அன்றாட சிறு செலவுகள் இதனால் பாதிக்கப்படாது. எனவே, 95% பரிவர்த்தனைகள் இந்த கட்டண வரம்பிற்குள் வராது. மேலும், வணிகர்கள் இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவார்களா அல்லது தாங்களே ஏற்றுக்கொள்வார்களா என்பது அவர்களின் விருப்பத்தைச் சார்ந்தது.