புது டெல்லி: பருத்தி இறக்குமதி மீதான சுங்க வரியை முழுமையாக ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு: இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு விதிக்கப்படும் சுங்க வரி மற்றும் 'வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம்' (Agriculture Infrastructure and Development Cess) ஆகியவற்றில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும். இந்த வரி ரத்து நடவடிக்கையானது, வரும் ஜூன் 1 முதல் அக்டோபர் 31 வரை அமலில் இருக்கும்.
இந்திய ஜவுளித் துறைக்கான பருத்தி இருப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தற்காலிக வரி விலக்கு ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் பெருமளவில் மூலதன செலவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் லாபம் கிடைக்கும். மேலும், உள்நாட்டு விவசாயிகளின் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும்.
மொத்தத்தில், இந்த நடவடிக்கை உள்நாட்டு ஜவுளித் துறையில் ஈடுபட்டிருக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும், சந்தையில் பருத்தியின் கையிருப்பை உறுதி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பருத்தி மீது 11 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.