வணிகம்

தமிழகத்தில் மயோனைஸ் மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு விதிக்கப்பட்ட தடையை, மேலும் ஓராண்டு காலத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் ஆர்.லால்வேனா வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் மயோனைஸ் தயாரித்தல், பதப்படுத்துதல், பேக்கேஜிங் செய்தல், விநியோகம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்த தடை பொருந்தும்.

தற்போது வழங்கப்பட்டுள்ள நீட்டிப்பின் மூலம், 2027 ஏப்ரல் மாதம் வரை தடை அமலில் இருக்கும். விதிகளை மீறி பச்சை முட்டை மயோனைஸை தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் உணவகங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டையின் வெள்ளை கருவுடன், தாவர எண்ணெய், வினிகர் மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படும் மயோனைஸ், ஒரு அரை திட உணவுப் பொருளாகும். இது பொதுவாக ஷவர்மா, கிரில் மற்றும் தந்தூரி போன்ற சிக்கன் உணவுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.

இதில், பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் எளிதில் பாக்டீரியாத் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய அதிக ஆபத்துள்ளதால், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அதற்கு தமிழக அரசு ஓராண்டு தடை விதித்தது.

முறையற்ற தயாரிப்பு மற்றும் சேமிப்பு முறைகளால் பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸில், சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்புள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உட்பட அனைத்து உணவு நிறுவனங்களும் பச்சை முட்டை அடிப்படையிலான மயோனைஸ் பயன்படுத்த இந்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தடையை மேலும் ஓராண்டு காலத்துக்கு நீட்டித்து தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT