வணிகம்

கரோனா பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்த தமிழர்கள் தொழில் தொடங்க மானியம் பெற அழைப்பு

செய்திப்பிரிவு

கோவை: கரோனா பரவல் காரணமாக, வெளிநாட்டில் வேலை இழந்து திரும்பிய தமிழர்கள் தொழில் தொடங்க அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புலம் பெயர்ந்தோருக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டத்தில் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கரோனா தொற்று பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெறலாம்.

2020 ஜனவரி 1-ம் தேதி அல்லது அதற்கு பின் தமிழ்நாடு திரும்பியவர்கள், வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களை அதிகபட்சம் ரூ.5 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும், உற்பத்தி சார்ந்த தொழில்களை அதிகபட்சம் ரூ.15 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும் தொழில் தொடங்கலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 45 வரை, இதர பிரிவினருக்கு 18 முதல் 55 வரை இருக்க வேண்டும்.

சொந்த முதலீடாக பொதுப் பிரிவினர் திட்டத் தொகையில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதமும் அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் மானியம் வழங்கப்படும். மானியத் தொகை 3 ஆண்டுகளுக்கு வங்கியில் வைப்புநிதியாக வைக்கப்பட்டு பின், கடனுக்கு சரிகட்டப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, மாவட்ட தொழில் மையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கோவை - 641001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 0422-2391678, 2397311 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT