வணிகம்

சென்செக்ஸ் 208 புள்ளிகள் சரிவு

செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 208 புள்ளிகள் (0.34 சதவீதம்) சரிவடைந்து 61,773 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 62 புள்ளிகள் (0.34 சதவீதம்) சரிந்து 18,285 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனே தொடங்கின. காலை 09:37 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 72.98 புள்ளிகள் சரிவடைந்து 61,908.81 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 57.40 புள்ளிகள் சரிந்து 18,290.60 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கி, தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே பயணித்தது. உலகளாவிய சந்தைகளின் மந்தமான போக்கு, நிதி, எண்ணெய், உலோகப் பங்குகளின் அதிக விற்பனை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் மூன்று நாள் லாபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 208.01 புள்ளிகள் சரிவடைந்து 61,773.78 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 62.60 புள்ளிகள் சரிந்து 18,285.40 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, இன்ட்ஸ்இன்ட் பேங்க், டைட்டன் கம்பெனி, டெக் மகேந்திரா, பவர்கிரிடு கார்ப்பரேஷன், மாருதி சுசூகி, எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ, ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, பாரதி ஏர்டெல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டிசிஎஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன. டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், எல் அண்ட் டி, கோடாக் மகேந்திரா பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், இன்போசிஸ், நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

SCROLL FOR NEXT