சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3 மற்றும் 5-ல் துணை நிலையம், துணை கட்டிடம் மற்றும் மேற்பார்வை கட்டுப்பாடு மையத்தில் மின்சார பணிகளுக்கான ஒப்பந்தம் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்திற்கு ரூ.533.87 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3 (மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை) மற்றும் வழித்தடம் 5-ல் (மாதவரம் பால்பண்ணை முதல் சிஎம்பிடி மற்றும் மாதவரத்தில் உள்ள பணிமனை உட்பட) துணை நிலையம், துணை கட்டிடம் மற்றும் மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்துதல் அமைப்பிற்கான அனைத்து வகையான மின்சார பணிகளுக்கான ஒப்பந்தம் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்திற்கு ரூ.533.87 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
மின்சார அமைப்பின் ஒட்டுமொத்த வடிவமைப்பு, தடையற்ற சேவைகளை வழங்குவதற்காக பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நிலையான மின்சாரம், அத்துடன் திறமையான மின் அமைப்பின் செயல்திறன் ஆகியவற்றை வழங்குவதை மையமாக கொண்டுள்ளது.
வழித்தடம் 3-ல் 29 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 10 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள், வழித்தடம் 5-ல் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 11 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மாதவரம் பணிமனை இதில் அடங்கும்.
இந்த ஒப்பந்தம் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்திற்கு ரூ.533.87 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வோதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் ஒப்பந்த துணை மின்நிலைய வணிகப் பிரிவின் தலைவர் ஹெச். ராஜேந்திரன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த நிகழ்வின்போது உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.