வணிகம்

அஞ்சலகங்களில் மகளிருக்கான சேமிப்பு திட்டத்தில் பயன்பெற அழைப்பு

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆ.ஆசிப் இக்பால் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெண்களின் மேன்மையை உறுதிப்படுத்தும் விதமாக ‘மகளிர் மதிப்பு திட்டம் 2023’ என்னும் சிறப்பு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். 31.3.2025 வரை அமலில் இருக்கும் இத்திட்டத்தில் சேர, குறைந்தபட்ச தொகையாக ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை செலுத்தலாம்.

ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஒரு கணக்கு மற்றும் அடுத்த கணக்குக்கான இடைவெளி 3 மாத காலமாகும். இத்திட்டத்தில் செலுத்தப்பட்ட முதலீட்டுக்கு, காலாண்டுக்கு ஒருமுறை கூட்டுவட்டி 7.5 சதவீதம் அதே கணக்கில் சேர்க்கப்படும். இதன் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் மட்டுமே. ஓராண்டுக்குப் பிறகு இருப்புத் தொகையில் 40 சதவீதம் வரை எடுத்துக் கொள்ளலாம்.

கணக்கு தொடங்கி 6 மாதங்கள் கழித்து முன்முதிர்வு செய்தால், குறைக்கப்பட்ட வட்டி விகிதம் 5.5 சதவீதம் முதலீட்டு தொகையுடன் கிடைக்கும். தற்போது, மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் மகளிர் மேன்மை சேமிப்பு திட்டத்துக்கான சிறப்பு மேளா நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் புதிய சேமிப்புக் கணக்கை அருகில் உள்ள அஞ்சலகங்களில் தொடங்கி பயன்பெற வேண்டும்.

SCROLL FOR NEXT