கோவை: உலகளவில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், கோவையில் உள்ள வார்ப்பட தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட வார்ப்பட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆட்டொமொபைல், பம்ப்செட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொருட்கள் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக வார்ப்படம் பயன்படுத்தப்படுகிறது. கோவையில் உற்பத்தி செய்யப்படும் வார்ப்படம் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் டிராக்டர், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் வார்ப்பட தேவை அதிகரித்த காரணத்தால் உற்பத்தியில் சீரான வளர்ச்சி காணப்பட்டது. இந்நிலையில், தற்போது உலகளவில் மீண்டும் வேகமெடுக்கும் கரோனா பரவல், வார்ப்பட தொழில் நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வார்ப்பட நிறுவனங்களின் தேசிய தொழில் அமைப்பான ‘தி இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியன் பவுண்டரிமென்’ (ஐஐஎப்) தென்மண்டல தலைவர் முத்துக்குமார், கோவை கிளை முன்னாள் தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் கூறும்போது, ‘‘இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட வார்ப்பட தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதுதவிர, உலகளவில் மீண்டும் வேகமெடுத்து வரும் கரோனா தொற்று பரவல் காரணமாக வார்ப்பட பணி ஆணைகள் குறையத் தொடங்கியுள்ளன.
இருப்பினும் ஆட்டோமொபைல், ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட துறைகளில் எடை குறைந்த பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் எதிர்வரும் நாட்களில் வார்ப்பட தேவையும் அதிகரிக்கும். மேலும் 3டி பிரின்டிங் டெக்னாலஜி, ஆட்டோமேஷன் உள்ளிட்ட நடவடிக்கைகளால் வார்ப்பட உற்பத்திக்கான செலவு குறையும். இதனால் வார்ப்பட தொழில் நிறுவனங்கள், நிதானமாகவும், நிலையாகவும் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியில் இருந்து மீண்டு வர தொடங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கோவை குறு, சிறு வார்ப்பட தொழில் நிறுவன உரிமையாளர்கள் சங்கத்தின் (காஸ்மாபேன்) தலைவர் சிவசண்முககுமார் கூறும்போது, “மூலப் பொருட்கள் விலையில் தற்போது தினமும் மாற்றம் காணப்படுகிறது. இது ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கிறது. குறைந்த பட்சம் 6 மாதங்களுக்கு மூலப் பொருட்களின் விலை சீராக உள்ளதை உறுதிப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போது தான் குறு, சிறு வார்ப்பட தொழில் நிறுவனங்கள் நெருக்கடியில் இருந்து மீண்டு வர வாய்ப்பு ஏற்படும். சொந்த ஊர்களுக்கு சென்ற வட மாநில தொழிலாளர்களில் பெரும்பாலானோர் கோவைக்கு திரும்பிய நிலையில் அவர்களுக்கு தடையில்லாமல் பணி வாய்ப்பு வழங்க முடியுமா என்ற சந்தேகத்தில் தொழில்முனைவோர் உள்ளனர்” என்றார்.