மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 600 புள்ளிகள் (0.99 சதவீதம்) உயர்வடைந்து 61,032 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 159 புள்ளிகள் (0.89 சதவீதம் ) உயர்வடைந்து 17,929 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாவது நாள் வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கின. காலை 10:05 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 274.38 புள்ளிகள் உயர்வடைந்து 60,706.22 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 62.00 புள்ளிகள் உயர்வடைந்து 17,832.90 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் சாதகமான போக்கு, மொத்த விற்பனைக் குறியீட்டு பணவீக்கத்தின் சாதகம், ஹெவிவெயிட் பங்குகளின் வாங்குதிறன் உயர்வு போன்ற காரணங்கள் இந்திய பங்குச்சந்தைகள் தங்களது இரண்டு நாள் வீழ்ச்சியில் இருந்து மீண்டு இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 600.42 புள்ளிகள் உயர்வடைந்து 61,032.26 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி158.95 புள்ளிகள் உயர்வடைந்து 17,929.85 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஐடிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், ஹெச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல், நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் உயர்வடைந்திருந்தன. டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.