மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 51 புள்ளிகள் உயர்ந்து 60,734 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 13 புள்ளிகள் உயர்வடைந்து 17,869 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாள் வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக தொடங்கின. தொடர்ந்து வர்த்தக நேரத்தின் போது வீழ்ச்சியை நோக்கி சென்றன. காலை 09:51 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 141.80 புள்ளிகள் சரிவடைந்து 60,540.90 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 38.30 புள்ளிகள் சரிவடைந்து 17,818.20 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளில் நிலவும் பாதகமான சூழல், ஜனவரி மாதத்தின் பணவீக்கம் தொடர்பான தகவல் வெளியாவது போன்ற காரணங்களால் இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்ற இறக்கமின்றி தொடங்கி வீழ்ச்சியை நோக்கிச் சென்றன.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டைட்டன் கம்பெனி, டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, ஐடிசி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. மறுபுரம் நெஸ்ட்லே இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி, விப்ரோ பங்குகள் சரிவில் இருந்தன.