ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை அமைக்க வர வேண்டும். இந்தியாவில் உற்பத்தியை தொடங்க வேண் டும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் 50-வது ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஜப்பான் சென்றுள்ளார். இதையடுத்து ஜப்பான் நாட்டின் நிதியமைச்சர் டாரோ அசோவை நேற்று சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பில், ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை அமைக்க வேண்டும். குறிப்பாக மெட்ரோ திட்டத்திற்கான `ரோலிங் ஸ்டாக்’ ஆலையை இந்தியாவில் அமைக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் உட்பட மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை பற்றி எடுத்துக் கூறினார். மேலும் உற்பத்தியை மேம்படுத்த அரசு வழங்கும் சலுகைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
முன்னதாக நேற்று முன்தினம் ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குநர் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஜேட்லி உரையாற்றினார்.