நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 
வணிகம்

மத்திய பட்ஜெட் 2023-24 | முக்கிய அம்சங்கள் 1 - இந்தியா ஓர் ஒளிரும் நட்சத்திரம்: பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் உரை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2023-24 தாக்கல் செய்யப்பட்டது.சரியாக காலை 11 மணியளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கான ஒப்புதலைப் பெற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

  • இந்தியாவை இந்த உலகமே ஓர் ஒளிரும் நட்சத்திரமாகப் பார்க்கிறது. உலகமே கடுமையான சூழலை சந்தித்துள்ள வேளையில் இந்தியா உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது.
  • உலக நாடுகள் பாராட்டும் வகையில் இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது.
  • பொருளாதார வளர்ச்சியில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது.
  • இந்த பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், தொழில் துறையினருக்கு உகந்ததாக இருக்கும்.
  • இந்தியப் பொருளாதார வளர்ச்சியை 7 இன்ஜின்களை செலுத்தி உறுதி செய்யவிருக்கிறோம். அவை: சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், பொதுப் போக்குவரத்து, நீர்நிலைகள், கட்டுமானம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய 7 இன்ஜின்களை இணைத்து செயல்படுத்தி இந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்வோம். இதற்கு எரிசக்தி பகிர்மானம், தகவல்கள் தொழில்நுட்பம், சமூக கட்டமைப்பு, நீர்நிலை பாதுகாப்பு துறைகள் துணையாக இருக்கும்.

முன்னதாக, இன்று காலை நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்தப் பேட்டியில், "மத்தியில் மோடி தலைமையில் அரசு அமைந்ததில் இருந்தே ஒவ்வொரு பட்ஜெட்டும் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. வரிச் சலுகைகளைப் பொறுத்தவரையில் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் பட்ஜெட் எல்லா தரப்பினரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

பட்ஜெட்டை உருவாக்கியவர்கள்: நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு இந்த பட்ஜெட்டைஉருவாக்கி உள்ளது. மத்திய நிதித் துறை செயலர் டிவி சோமநாதன் (தமிழ்நாட்சை சேர்ந்தவர்), பொருளாதார விவகார துறை செயலர் அஜய் சேத், முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை செயலர் துகின் கந்தா பாண்டே, வருவாய் துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா, நிதி சேவைகள் துறை செயலர் விவேக் ஜோஷி, தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் இந்தப் பட்ஜெட் உருவாக்கத்தில் பங்கு வகித்துள்ளனர்.

பட்ஜெட் செயலி: பட்ஜெட் உரை முடிந்த பிறகு, பட்ஜெட் ஆவணம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இணையத்தில் பதிவேற்றப்படும். ‘Union Budget Mobile App’ என்ற செயலி மூலம் பட்ஜெட் ஆவணத்தை வாசிக்க முடியும்.

SCROLL FOR NEXT