கோவில்பட்டி: தீப்பெட்டி தொழிலை நம்பி உள்ள 6 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிபட்டணம் ஆகிய இடங்களில் சுமார் 2,530 தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி வாடகை உயர்வு, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மேலும் பின்னடைவை இத்தொழில் சந்தித்துள்ளது. இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி விற்பனையும் வெகுவாக சரிந்துவிட்டது.
எனவே, இந்த நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய நிதிநிலை அறிக்கையில் பிளாஸ்டிக் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் எதிர்பார்க் கின்றனர்.
இது குறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறியதாவது: வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படும் தீப்பெட்டிகளுக்கு 11 சதவீதம் ஊக்கத் தொகை மத்திய அரசு வழங்கி வந்தது. சிறிது சிறிதாக இது குறைக்கப்பட்டு, தற்போது 1.5 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது.
இதனால், உள்நாட்டிலேயே சந்தையில் போட்டி போட்டு விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அந்நாட்டு அரசு 20 சதவீதம் ஊக்கத்தொகை அளித்து வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிக்கான ஊக்கத்தொகையை மீண்டும் 11 சதவீதமாக உயர்த்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும்.
தீப்பெட்டி தயாரிப்புக்கு தேவையான இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு வழங்கப்படும் வங்கி கடன் தொகையை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும். இக்கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு போன்றவற்றால் லாரி வாடகை அதிகரிப்பு, மின் கட்டணம் மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வு, மூலப்பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றால் தீப்பெட்டியின் அடக்கச் செலவு அதிகரித்துள்ளது.
இதற்கு ஏற்ப தீப்பெட்டி சந்தையில் விற்பனை விலை கிடைக்காததால் மிகவும் தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது. நிதிநிலை அறிக்கையில் எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.