பெங்களூரு: சர்வதேச அளவில் ஐடி துறையில் வேலைநீக்கம் தீவிரமடைந்து வருகிறது. கூகுள், மைக்ரோசாஃப்ட் உட்பட முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குவதாக அறிவித்தன. இந்நிலையில், இந்தியாவில் விப்ரோ நிறுவனம் 450 ஆரம்ப நிலை ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது.
இது குறித்து விப்ரோ நிறுவனம் கூறுகையில், “எங்கள் ஊழியர்களிடமும் தரத்தை எதிர்பார்க்கிறோம். கல்லூரி முடித்து புதிதாக பணிக்கு சேரும் ஆரம்ப நிலை ஊழியர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்குகிறோம். அதன்பிறகு அவர்களது வேலைத்திறனை மதிப்பிடுகிறோம். அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் செயல்திறன் குறைவாக உள்ள 452 பணியாளர்களை நீக்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
விப்ரோ நிறுவனம் அந்த 452 ஊழியர்களுக்கு அனுப்பிய வேலைநீக்க கடிதத்தில், “உங்கள் ஒவ்வொருவருக்கும் பயிற்சி வழங்க ரூ.75 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. முறைப்படி இந்தத்தொகையை நீங்கள் நிறுவனத்துக்குத் திருப்பித் தர வேண்டும். ஆனால், நிறுவனம் இந்த தொகையை தள்ளுபடி செய்கிறது” என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் வாடிக்கையாளர்கள் பணம் செலவிடுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர் என்றும். இதனால், நடப்பு காலாண்டில் ஐடி நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் விப்ரோ தெரிவித்துள்ளது.