கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து கடந்த 5 நாட்களில் ஏழு டன் எடையிலான கரும்பு, மஞ்சள், வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தில் 5 நாட்கள் ஷார்ஜாவுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அதிகளவு புக்கிங் செய்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, மஞ்சள், வாழை இலை, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு புக்கிங் செய்யப்பட்டு ஷார்ஜா செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளன. 5 நாட்களில் மொத்தம் 15 டன் எடையிலான சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன.
அதில் 5 டன் கரும்பு மற்றும் 2 டன் வெல்லம், மஞ்சள், வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கும். இந்த பொருட்கள், மதுரை, தேனி, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டு, இங்கிருந்து விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன, என்றனர்.