சென்னை: கியா இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆட்டோ எக்ஸ்போவின் 16-வது பதிப்பில் கியா இந்தியா நிறுவனம் இவி9 என்ற மின்சாரத்தில் இயங்கும் எஸ்யுவி கார், புதுமையான வடிவமைப்புடன் கூடிய கேஏ4 என்ற சொகுசு எஸ்யுவி ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.
மேலும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் தொடர்பான ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காகவும், உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புக்காகவும் இந்தியாவில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பர்பஸ்-பில்ட் வெஹிக்கிள்ஸ் (PBV) பிரிவில் நுழையப்போவதாகவும் அறிவித்தது.
கியா இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டே-ஜின் பார்க் கூறும்போது, “இவி9 மூலம் இந்தியாவில் எங்களது மின்மயமாக்கல் பயணத்தை தொடங்கியுள்ளோம். மேலும் கேஏ4 மூலம் பெரிய திறன் நிறைந்த பாதுகாப்பான வாகனத்தை அறிமுகப்படுத்துகிறோம். மேலும் பர்பஸ்-பில்ட் வெஹிக்கிள்ஸ் மூலம் இந்தியச் சந்தையின் பூர்த்தி செய்யப்படாத தேவையை நாங்கள் மீண்டும் ஒருமுறை வெற்றிகரமாக அங்கீகரித்துள்ளோம்” என்றார்.
ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார கான்செப்ட் இவி9 இந்த ஆண்டு முதல் காலாண்டில் சர்வதேசச் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. 4,930 மி.மீ. நீளம், 2,055 மி.மீ அகலம், 1,790 மி.மீ. உயரம் மற்றும் 3,100 மி.மீ. வீல்பேஸ் கொண்டதாக இந்த இவி9 இருக்கிறது.
அதேபோல கியா கேஏ4 ஒரு ஆடம்பரமான பெரிய வாகனமாக உள்ளது. திறன், பாதுகாப்பு நிறைந்ததாகவும், பயணிகளுக்கும் சரக்கு ஏற்றுவதற்கும் ஏற்றதாகவும் உள்ளது. ரிமோட் ஸ்மார்ட் பார்க்கிங் அசிஸ்ட், லேன் ஃபாலோயிங் அசிஸ்ட், முன்னோக்கிய மோதல் தவிர்ப்பு உதவி, பிளைண்ட் ஸ்பாட் அவாய்டன்ஸ் அசிஸ்ட், டூயல் சன்ரூஃப், வயர்லெஸ் ஸ்மார்ட் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன.