எலான் மஸ்க் | கோப்புப்படம் 
வணிகம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் 2-ம் இடம்; முதலிடத்தில் பெர்னார்ட் அர்னால்ட் - காரணம் என்ன?

செய்திப்பிரிவு

கலிபோர்னியா: உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்கை முந்தி முதலிடம் பிடித்துள்ளார் பெர்னார்ட் அர்னால்ட். இதற்கு காரணம் கடந்த திங்கள் அன்று டெஸ்லா நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அன்றைய நாளில் மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ/700 கோடி மேல் மஸ்க் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் தி போரிங் கம்பெனியின் நிறுவனர், நியூரா லிங்க் நிறுவனத்தின் இணை நிறுவனர், ட்விட்டர் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என பல்வேறு பொறுப்புகளை கவனித்து வருகிறார் எலான் மஸ்க். அதன் காரணமாக 2020 முதல் 2022 வரையில் அவரது சொத்து மதிப்பு எழுச்சி பெற்றது.

இந்தச் சூழலில் திங்கள் அன்று டெஸ்லா பங்குகள் 4 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது. அதனால் இப்போது இரண்டாவது இடத்தில் 164 பில்லியன் டாலர்களுடன் மஸ்க் பின்தங்கி உள்ளார். முதலிடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் 171 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முந்தியுள்ளார். இது ப்ளூம்பெர்க் நிறுவன உலக பணக்காரர்கள் பட்டியலில் வெளியாகி உள்ளது.

பெர்னார்ட் அர்னால்ட்

73 வயதான பெர்னார்ட் அர்னால்ட், எல்விஎம்ஹெச் நிறுவத்தின் தலைவராக இயங்கி வருகிறார். இதற்கு முன்னர் பலமுறை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இவர் பிடித்தது உண்டு.

தற்போது ட்விட்டர் நிறுவனத்தை கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் மஸ்க். மற்ற நிறுவனங்களை காட்டிலும் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தில் அதி தீவிரமாக இயங்கி வருகிறார். அதே நேரத்தில் மின்சார வாகன நிறுவனம் டெஸ்லா முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்தது கூட சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT