நாட்டின் மொத்த மதிப்பு கூட்டல் வளர்ச்சி (ஜிவிஏ) 7.1 சதவீதமாக குறையும் என ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. முன்னதாக 7.6 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. மும்பையில் நேற்று நடந்த நிதிக்கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி இதனை அறிவித்தது. பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, ரிசர்வ் வங்கி தன்னுடைய நிதிக்கொள்கையை நேற்று அறிவித்தது. டெபாசிட்கள் வரத்தொடங்கியதை அடுத்து வட்டி விகிதம் குறைக்கப்படும் என்னும் எதிர்பார்ப்பு இருந்த சூழ்நிலையில் வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. தற்போதைய நிலையில் ரெபோ விகிதம் 6.25 சதவீதமாக இருக்கும்.
புதிதாக அமைக்கப்பட்ட நிதிக் கொள்கை குழு கடந்த செவ்வாய் கிழமை கூடியது. அதன் தொடர்ச்சி யாக நேற்றும் கூடி வட்டி விகிதம் குறித்த முடிவினை எடுத்தது. புதி தாக உருவாக்கப்பட்ட இந்த குழு கூடும் இரண்டாவது கூட்டம் இது. நிதிக்கொள்கை குழுவில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் வட்டி விகிதம் தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் என வாக்களித்தனர்.
பண மதிப்பு நீக்கம் காரணமாக குறுகிய காலத்தில் இரண்டு வகை யான பாதிப்புகள் ஏற்படகூடும். ரீடெய்ல், உணவகம், போக்கு வரத்து உள்ளிட்ட பணப்புழக்கம் உள்ள இடங்கள், முறைப்படுத்தப் படாத தொழில்களில் பாதிப்பு இருக்கும். தவிர இதன் காரணமாக இவற்றின் தேவையும் குறையும் என கூறியிருக்கிறது. மேலும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நிதிச்சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கம் காரணமாக நான்காம் காலாண்டு பணவீக்கம் இலக்கை அடையமுடியாமல் போகலாம். அதன் காரணமாகவே வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.
ரிவர்ஸ் ரெபோ விகிதம் மற்றும் ரொக்க கையிருப்பு விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. வரும் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நிதிக்கொள்கை குழுவின் அடுத்த கூட்டம் நடக்க இருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாக வங்கித்துறை வல்லுநர்கள் பலர் தெரிவித்திருக்கின்றனர்.
ரூ.3.81 லட்சம் கோடி
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, சிறிய மதிப்பு ரூபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆர்.காந்தி தெரிவித்தார். நவம்பர் 10 முதல் டிசம்பர் 5 வரையிலான கால கட்டத்தில் 3.81 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. 850 கோடி 100 ரூபாய் நோட்டுகள், 180 கோடி 50 ரூபாய் நோட்டுகள், 310 கோடி 20 ரூபாய் நோட்டுகள் 570 கோடி 10 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
சந்தை சரிவு
வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படாததால் நேற்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் முடிவடைந்தன. ஒரு கட்டத்தில் 300 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்த சென்செக்ஸ் வர்த்தகத்தின் முடிவில் 155.89 புள்ளிகள் சரிந்து 26236 புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல நிப்டி 41 புள்ளிகள் சரிந்து 8102 புள்ளியில் முடிவடைந்தது.
துறைவாரியாக பார்க்கும் போது ஹெல்த்கேர் குறியீடு அதிகபட்சமாக 1.7 சதவீதம் சரிந்தது. அதனை தொடர்ந்து வங்கி மற்றும் ஐடி குறியீடுகள் சரிந்தன. மாறாக ஆட்டோ, மெட்டல் குறியீடுகள் சிறிதளவு உயர்ந்து முடிந்தன.